பேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்ட தன் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.
சமீபத்தில் ரிலீசான 'பேட்டை' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ரஜினி உட்பட ரசிகர்கள் அனைவருமே சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
பொதுவாக, ரஜினி வீட்டில் இருந்தால், மாடியில் இருந்து ரசிகர்களை பார்த்து கை அசைப்பதுதான் பழக்கம். ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இது மாறியுள்ளது.
ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்ததை கண்ட ரஜினிகாந்த், வீட்டில் இருந்து வெளியே வந்தார். கேட்டின் முன்பு நின்றிருந்த ரசிகர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்தை கேட்ட தொண்டர்கள் உற்சாகமாகி, தங்களது வாழ்த்தையும் பரஸ்பரம் தெரிவித்தனர்.
பேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள் #Rajinikanth pic.twitter.com/XqjmA1KB3o
— Oneindia Tamil (@thatsTamil) January 15, 2019
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்றார். மீண்டும் ஒருமுறை ரசிகர்களை பார்த்து வழக்கமான சிரிப்புடன் கையசைத்துவிட்டு வீட்டிற்குள் ரஜினி சென்றுவிட்டார்.