திஸ் ஈஸ் டூ மச்... மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய ரஜினிகாந்த்.. ஆனால் பல கேள்விகளுக்கு பதில் இல்லையே
மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
சென்னை: "ரஜினி எங்கே.. வீதிக்கு வாங்க.. வீதிக்கு வாங்க"ன்னு கேட்டுட்டே இருந்த நிலையில், வீதியிலேயே நின்று வழக்கம்போல் பாதி வெந்தும் பாதி வேகாத கருத்துக்களை ரஜினிகாந்த் உதிர்த்துவிட்டுபோய் உள்ளார். அதேசமயம் ரஜினிகாந்த்தின் இந்த பேட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
Recommended Video
ரஜினிகாந்த் பேசிய முக்கிய வரிகள் இதுதான்: "டூமச்சாக போய்க் கொண்டிருக்கிறது.. என்ன இது? சிஏஏவுக்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை... மதத்தை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது... மத்திய அரசு சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை... மத்திய உளவுத்துறையின் தோல்வியே கலவரத்திற்குக் காரணம்... வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. இதைச் சொல்வதால் நான் பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள்.. என்னை பாஜக ஆள் என்று சிலர் கூறுவது வேதனை அடையச் செய்கிறது" என்று கூறியுள்ளார்.
"மத்திய அரசு தோற்று விட்டது" என்று பகிரங்கமாகவே சொல்லி உள்ளது கவனிக்கத்தக்கது... முதல் முறையாக மோடி அரசு தோற்று விட்டதாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. பாஜகவின் நிழல் என்றே கருதப்பட்டவர், அமித்ஷா - மோடியை அர்ஜுனன், கிருஷ்ணனாக உருவகப்படுத்தி பேசியவர் இன்று இப்படி சொல்கிறார்.. இதற்கு என்ன காரணம்?
முதலாவதாக, மத்திய அரசுக்காக பரிந்து பேசி போய் அதற்காக ரஜினிகாந்த் தந்து வரும் விலை அதிகமானது.. நிறைய கல்லடிகளும், சொல்லடிகளும் விமர்சனங்களாய் விழுந்து வருகின்றன.. ரஜினியால் சொந்தமாக ஒரு கட்சியை இன்னமும் தொடங்க முடியாத நிலையில் உள்ளதற்கு பாஜகவின் அழுத்தம் கூட காரணம் என்று சொல்லப்படுகிறது.. இப்போது மத்திய அரசின் எல்லை மீறும் போக்கையும் ஆமோதிப்பது பின்னாளில் தனக்கு எதிரானதாகவே அமையும் என்று ரஜினி கருதுகிறார்.. அது மட்டுமில்லை.. ரஜினியின் பொறுமையையே சோதிக்கும் வகையில் பாஜக அரசு போய்க் கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது.. இப்படியே போனால் ரஜினிகாந்த பாஜகவுக்கு எதிராக திரும்பும் மிக முக்கியமான நபராகவும் மாறக் கூடும். அப்படி மாறிவிட்டால், அது பாஜகவுக்கு தேசிய அளவில் நிச்சயம் ஆபத்தையே ஏற்படுத்தும்.
இரண்டாவதாக, சிஏஏ வாபஸாகாது என்று உறுதியாக சொல்கிறார்.. இந்த போராட்டம் அர்த்தமற்றது என்றும் சொல்கிறார்.. இதிலிருந்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாகத்தான் இருக்கும் என்று ரஜினி சேம் சைட் கோல் அடித்துள்ளார். .. எப்படி தூத்துக்குடி போராட்டத்தை வேஸ்ட் என்றாரோ அதேபோலத்தான் டெல்லி போராட்டமும் பயனற்றது என்கிறார்.. அதாவது போராட்டம் சரியே என்று அடித்துக் கூற மாட்டேன் என்கிறார்.. மாறாக அந்த போராட்டங்களை ஒடுக்க அவிழ்த்து விடப்படும் வன்முறையைத்தான் பிரதானப்படுத்தி பேசுகிறார். .. அது போராடி கொண்டிருக்கும் பெண்கள், குழந்தைகளின் உணர்வைகூட கேவலப்படுத்துவதாக அமைகிறது.. உள்துறை தோல்வி என்று சொன்னது மக்களுக்காக சொன்ன மேல்பூச்சுபோலதான் உள்ளதே தவிர.. மக்களின் உணர்வுக்கான பதிலடி இல்லை!
மூன்றாவதாக, இந்த பிரச்சனைக்கே முக்கிய காரணமான கபில் மிஸ்ரா பற்றி ஒரு வார்த்தைகூட ரஜினிகாந்த் பேசவே இல்லை.. கபில் மிஸ்ராதான் உண்மையில் இந்த கலவரம் வெடிக்கவே முக்கியக் காரணம். அமைதியாக போராடிய மக்களை வெறிப்பேச்சால் தூண்டி விட்டதே இந்த மிஸ்ராதான். உள்துறையை குறை சொல்வது என்பது ஒரு அமைச்சகத்தை பற்றி பேசுவது.. அது பொத்தாம் பொதுவானது.. ஆனால் டெல்லி போராட்டம் என்றாலே கபில் மிஸ்ரா பெயரை குறிப்பிட்டிருக்க வேண்டும்.. தனிப்பட்ட பெயரை சொல்லாமல்விட்டது ஏற்க முடியாததே! கபில் மிஸ்ராவை குற்றஞ்சாட்டாமல் அமைதியான போராட்டத்தில் வன்முறை என்று பொதுமக்களின் மீது திசைதிருப்புவதும் உகந்தது அல்ல!
நான்காவதாக, சிஏஏவால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் குரல் கொடுப்பேன் என்கிறார். ஆனால் ஏற்கனவே அஸ்ஸாமில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் நாடு முழுவதும் வந்தால் பாதிப்பு ஏற்படும் என்றுதான் எல்லோரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் அதுகுறித்து இப்போதும் ரஜினிகாந்த் தெளிவாகப் பேசவில்லை. மொத்தம் 24 உயிர்களுக்கு மேல் பறி போயுள்ளது. அவர்களை பற்றியும் வாய் திறக்கவில்லை.. பெயரளவுக்கு கூட சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுங்க என்று சொல்லாதது வருத்தம் தருகிறது.. ரஜினிகாந்த் நினைத்திருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்திருக்க முடியும்.. இப்படி செய்யுங்க-.. நான் உங்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக வருகிறேன் என்று கூட நெருக்கலாம்... ஒருவேளை அப்படி செய்திருந்தால், ரஜினியின் ஆதாயத்துக்காக மத்திய அரசு கண்டிப்பாக இறங்கி வரவே செய்யும்... ஆனால் அதையும் ரஜினி செய்ய மாட்டேன் என்கிறார்.
ஐந்தாவதாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது சமூக விரோதிகள் புகுந்ததாக கூறினார். ஆனால் இப்போது டெல்லி கலவரத்தை உளவுத்துறை தோல்வி என்று சொல்லியுள்ளார். அதாவது தூத்துக்குடி கலவரத்துக்குக் காரணம் சமூக விரோதிகள்.. டெல்லி கலவரத்துக்குக் காரணம் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா போன்றோரின் தூண்டுதல் இல்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ரஜினிகாந்த். முரண்பாடாக இங்கும் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
இறுதியாக, "டெல்லி பற்றி எரிகிறது.. ரஜினியை காணோம்" என்று எதிர்ப்புகள் பெருகவும், அதற்காகவே ஓடோடி வந்து இந்த பேட்டியை ஒப்புக்கு தந்ததுபோலவே உள்ளது... ஆழமாக இந்தப் பிரச்சினையில் ரஜினிகாந்த் இறங்கத் தவறுகிறார். ஆனால் முதல் முறையாக மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். இது மத்திய அரசுக்கு உரைக்கும் என்றுதான் தெரிகிறது.. மத்திய அரசுக்கு கண்டனம் என்ற ஒரு விஷயத்தை தவிர ரஜினியின் பேட்டி வழக்கம்போலவே பாதி புரிந்தும் பாதி புரியாமலும் பல கேள்விகளுக்கு விடை இல்லாமலும்தான் உள்ளது.