திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர் பாலு- நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளராக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் பேராசிரியர் க. அன்பழகன், வயது முதுமையால் காலமானார். இதனையடுத்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது.
இந்த பதவிக்கு திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் போட்டியிட இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காலத்தினால் இந்த தேர்வு நடைபெறவில்லை. இதனால் பொருளாளர் பதவியிலேயே துரைமுருகன் நீடித்து வந்தார்.
"அவங்களுக்கு முன்னாடி.. நான்லாம் சாதாரணமான ஆளு.. பயமா இருக்குங்க".. அதிர வைத்த துரைமுருகன்
இந்நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த இரு பதவிகளுக்கு வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். திமுகவின் 4-வது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் துரைமுருகன். திமுகவில் இதுவரை அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக இருந்துள்ளனர்.
இதனிடையே துரைமுருகன், டி.ஆர். பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள வாழ்த்து:
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.