தமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்
Recommended Video
சென்னை: "தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது" என்று நடிகர் ரஜினிகாந்த் தேங்காய் உடைத்தது போல ஓபனாக கருத்து சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமில்லை.. தென்னிந்தியாவில் எங்குமே திணிக்க முடியாது என்று தடாலடியாக கூறி உள்ளது மிகப்பெரிய பரபரப்பை தந்துள்ளது.
"நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும்" என்று பாஜக தலைவர் அமித்ஷா.. ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இல்லாமல்.. அழுத்தம் திருத்தமாக, தெள்ளத் தெளிவாகவே தனது கருத்தை சொல்லி இருந்தார்.
இதையடுத்து திமுக, பாமக, விசிக, என முக்கிய கட்சி தலைவர்கள் கொதித்து போய் கண்டனங்களை பதிவிட்டனர். கமலோ இதற்காக ஒரு வீடியோவையே போட்டு பாஜக தரப்பை கடுப்பாக்கினார். ஆனால் ரஜினி மட்டும் வழக்கம்போல வாயை திறக்கவே இல்லையே,, எதுவும் இதை பற்றி கருத்து சொல்லவே இல்லையே என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
ஹேட்ஸ் ஆப்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு கையாண்ட உத்திகளுக்கு ‘ஹேட்ஸ்ஆப்' என்றவர், மோடியும் அமித்ஷாவும், கிருஷ்ணன் + அர்ஜூனன் போன்றவர்கள் என்றவர்.. இந்த மொழி விவகாரத்துக்கு என்னத்த சொல்ல போகிறாரோ, என்ற எதிர்பார்ப்பும் எழுந்து கொண்டே இருந்தது.
ஆஹா.. இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான் பாஜகவின் கருத்தும்.. ராகவன் அதிரடி
பேனர்கள்
ஆனால்.. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்ற அவரது பாஷையிலேயே கருத்து சொல்லி உள்ளார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்களை பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறினார். பின்னர் இந்தி மொழி திணிப்பு குறித்து அவர் சொன்னதாவது:
ஏற்க மாட்டார்கள்
"இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் யாரும் ஏற்க மாட்டார்கள். பொதுவான மொழி இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல.. தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க கூடாது. அப்படி திணித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று பளிச்சென சொல்லி உள்ளார் ரஜினி!
பாஜக ஆதரவாளர்?
ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "பாஜக ஆதரவாளனாக தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகளால் வேதனை அடைந்திருப்பதாகவும், இது தொடர்பாக மன்ற நிர்வாகிகளிடம் சொல்லி ரஜினி வருத்தப்பட்டதாகவும் இன்று தகவல்கள் வெளியான நிலையில், பாஜகவுக்கு எதிரான ரஜினியின் இந்த கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பட ரிலீஸ்?
ஒருவேளை உண்மையிலேயே பாஜகவுக்கு எதிரான கருத்தை ரஜினி முன் வைத்துள்ளாரா. அல்லது வழக்கம்போல ஒரு படம் ஓட வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பேட்டியை தந்துள்ளாரா என்பதை "தர்பார்" பட ரிலீசுக்கு பிறகுதான் தெரியவரும்!