ரஜினி வருகிறார்.. 'தர்பார்' அரசியலோ.. நிஜ பிரவேசமோ.. இனி சீமானுக்கு நிறைய வேலைகள் இருக்கும்!
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க போவதாக சொல்லப்படுகிறது
Recommended Video
சென்னை: வரும் பொங்கலுக்கு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இதனை எப்படி எதிர்நோக்கப் போகிறது? என்பதை இனி கவனிக்க வேண்டி உள்ளது.
"எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே, எங்கு வாழ்ந்தாலும் அயலான் அயலானே. ஒருவர் ஏன் இனம்மாறுகிறார் அதில் இருந்தே தொடங்குகிறது ஏமாற்றம்" இதுதான் ரஜினி குறித்த சீமானின் அடிப்படை கருத்து.
"ஒரு மலையாளிக்கு தெரிகிறது முல்லைப்பெரியாறு பிரச்னை வந்தால் உடனே தமிழர்களை அடையாளம் கண்டு அடித்து விரட்டுகிறான். கன்னடருக்கு தெரிகிறது காவிரி நீர் பிரச்னை வந்தால் உடனே தமிழனை விரட்டி அடிக்கிறான். அரசியல் கட்சி தொடங்க 8 கோடி தமிழனில் எவனுக்குமே தகுதியில்லையா, யாருமே யோக்கியன் இல்லையா?" என்று அன்றே கேள்வி எழுப்பினார் சீமான்,
Exclusive: ''அரசியலுக்கு புதிது என்பதால் மெதுவாக தான் செயல்படுகிறேன்''.. ம.நீ.ம. உமாதேவி
ரஜினி
ரஜினி அரசியல் என்றாலே கொதிப்படையும் சீமான், ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் இன ரீதியாகதான் இதனை அணுகுகிறார், கையாள்கிறார், விமர்சிக்கிறார் என்றேதான் பொதுப்படையாக கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக கமலுடன் சீமானுக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும், ரஜினி என்று வரும்போது கமலை கட்டி அணைத்து கொள்கிறார். "ரஜினியை விட கமல்ஹாசன் தான், கலைத்துறையில் அதிகம் உழைத்தவர், ரஜினி குறித்து பள்ளிப் பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல்" என்றார்.
மகிழ்ச்சி
இதேபோலதான் விஜய்யையும் வரவேற்கிறார். "விஜய் என் தம்பி. என் இனம் சார்ந்தவன். விஜய் வந்து அரசியல் செய்வதென்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். மக்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், பாராட்டுவேன்" என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார்.
தூண்டுதல்
ஆக மொத்தம், ரஜினியை தவிர வேறு யார் வந்தாலும் அதனை வெறிகொண்டு எதிர்க்காமல் உள்ளார் சீமான். இது பிரிவினைவாதம் என்றும், மக்களை இனரீதியாக தூண்டிவிட்டு மோதவிடும் போக்கு என்றும் ஒருசிலரால் பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லை, ரஜினியை எதிர்த்தால் சீமான் பலமான அரசியல்வாதியாக முதல்வர் ஆகிவிடலாம் என்று எண்ணுகிறார் . அதனால்தான் தினமும் ரஜினியை ஏதாவது ஒரு வகையில் சாடிக் கொண்டே இருக்கிறார் என்றும் சீமானுக்கு எதிரான பேச்சுக்களும் உள்ளன.
சேவை
மற்றொரு பக்கம், "சீமான் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? வெறும் வசனங்களை மனப்பாடம் செய்துவிட்டு, கோடி கோடியாக பணமும் சேர்த்துவைத்துவிட்டு, கடைசி காலத்தில் அரசியலுக்கு வருவது என்ன நியாயம் என்றும், சமூக அக்கறை, சேவை மனப்பான்மை உட்பட இதுவரை இந்த தமிழக மக்களுக்கு ஏதாச்சும் ரஜினி நல்லது செய்திருப்பாரா? தமிழக பிரச்சனைகளை துணிந்து கேள்வி கேட்டுபோராடி இருப்பாரா?" என்ற சீமானுக்கு ஆதரவான கேள்விகளிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
தர்பார்?
இப்போது ரஜினியின் அரசியல் கட்சி பெயர், கூட நமக்கு தெரியாது, முதலில் கட்சியை கண்டிப்பாகவே ஆரம்பிக்க போகிறாரா அல்லது இதுவும் "தர்பார்" அரசியல்தானா என்றும் நமக்கு உறுதியாக தெரியாது. அப்படியே கட்சி ஆரம்பித்தாலும் அவரது கொள்கை எந்த மாதிரியாக இருக்க போகிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.
ரசிகர்கள் - தொண்டர்கள்
எனினும், சமீபகாலமாகவே சீமான் தொண்டர்களும், ரஜினி ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் பலமாக மோதி கொண்டிருக்கும் போக்கு தென்பட்டு வருகிறது. இது ரஜினி கட்சி ஆரம்பித்தால், இதன் போக்கு இன்னும் தீவிரமாகும் என்றே தெரிகிறது. வெறும் அரசியல் ரீதியான போட்டி என்றால் அதன் பாதிப்பு நமக்கு குறைவாகத்தான் இருக்கும். எப்படியாவது சரி செய்துவிடலாம்.
விபரீதங்கள்
ஆனால், இரு தரப்பின் இனரீதியான தாக்கத்தின் விபரீத விளைவுகள், தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அப்படி ஒரு விபரீதம் நம் மாநிலத்தில் எந்த சூழலிலும் நடந்துவிடக்கூடாது. இனவாத மோதல் - தாக்குதல்கள் எதுவும் இங்கே நடந்துவிடாமல், அவைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து பார்த்து கொள்வது, சீமான், ரஜினி என்ற மாபெரும் ஆளுமைகளின் கையில்தான் உள்ளது.