பிரஷாந்த் கிஷோருடன் ரஜினி திடீர் சந்திப்பு.. அரசியல் குறித்து முக்கிய விவாதம்
சென்னை: நிஜமாவே ரஜினி கட்சி ஆரம்பிச்சிடுவார் போல இருக்கு.. நடக்கிற விஷயங்களை கவனித்தால் அப்படித்தான் தெரியுது! முக்கியமாக.. பிரஷாந்த கிஷோரை போய் பார்த்துவிட்டு வந்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்.. தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார்.
இவரிடம் காணப்படும் முக்கிய அம்சம் என்னவென்றால், யாருக்காக வேலை பார்க்கிறோமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார். ஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர்.
மோடி
2 முறை மோடி ஆட்சியில் அமர சாட்சாத் இவர்தான் காரணம்.. ஜெகன்மோகன் ரெட்டி முதல் நிதிஷ் குமார் வரை இவர்களின் வெற்றிக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதும் இவர்தான்! இப்படிப்பட்டவரை நம்ம மாநில அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து பேசி வருகின்றனர். எம்பி தேர்தல் தோல்வியால் நொந்து போயிருந்த நம் முதல்வர் பிரசாந்தை சந்தித்து பேசியதாகவும், 2021-ல் தமிழக சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரை நியமிக்க ஒப்பந்தம் வரை சென்றதாகவும் செய்திகள் வந்தன.
மய்யம்
இதன்பிறகு கமல் போய் அவரை பார்த்து பேசிவிட்டு வந்தார். இதற்கு பிறகு, கிராமங்களில் உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர்கள் நியமனம் என்று மய்யம் தனது வேலையை கிடுகிடுவென தொடங்கி உள்ளது. இதனால் மய்ய உறுப்பினர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது போக, பிரஷாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் நெருக்கம் உள்ளது. ஓஎம்ஜி என்கிற நிறுவனம்தான் திமுகவுக்கு பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறது.
சந்திப்பு
இவர்கள் எல்லாம் போதாதென்று, ரஜினியும் இப்போது பிரசாந்த் கிஷோரை போய் சந்தித்துவிட்டு வந்துள்ளார். இதோ, அதோ என்று சொல்லி கொண்டிருக்கும் ரஜினி மீது மக்களுக்கு நம்பிக்கை போய் நாளாகி விட்ட நிலையில், இப்படி ஒரு சந்திப்பு நடந்துள்ளது.
தனிக்கட்சி
ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்றும், 2021 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்றும் செய்திகள் சில தினங்களாகவே பலமாக எழுந்து வருகிறது. இது வழக்கம்போல், ஒரு படத்தை ஓட வைக்க ரஜினி மேற்கொள்ளும் யுக்தியாகவும், தர்பார் பட வியாபார பேச்சாகவும் பார்க்கப்பட்டது.
அரசியல்?
ஆனால் பிரசாந்த் கிஷோரை சந்தித்து விட்டு வந்ததை பார்த்தால் நிஜமாகவே கட்சியை ஆரம்பித்துவிடுவார் என்றுதான் தெரிகிறது. அதற்கான முதற்கட்ட வேலைகளும் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாந்த் கிஷோரிடம் என்ன மாதிரியான பேச்சை ரஜினி விவாதித்திருப்பார் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், இது ஒரு அரசியல் சந்திப்பு என்பது மட்டும் தெளிவாகிறது.
தனிக்கட்சி
அதேசமயம், மதுரையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தனது அரசியல் பிரவேசத்தையும், கட்சிப் பெயரையும் ரஜினி அறிவிக்கப் போகிறார் என்றும் ஒரு டாக் கிளம்பியுள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதோ ஒன்றை ரஜினி நடத்தப் போகிறார் என்பது மட்டும் தெரிகிறது. இவ்வளவு காலம் சோர்ந்து போயிருந்த ரஜினி ரசிகர்கள், இந்த சந்திப்பிற்கு பிறகு குதூகலமாகி உள்ளனர். ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தி உள்ளது.
மழைதான்
ஆக மொத்தம் .. பிரசாந்த் கிஷோர் என்ற பிரம்மாஸ்திரத்தை முழுமையாக கையில் எடுத்து பயன்படுத்தி கொள்ள போவது.. அதிமுகவா? திமுகவா? கமலா? ரஜினியா? அல்லது இவங்க எல்லாரும்தானா? என்பது தெரியவில்லை.. ஆனால் தேர்தல் முடியும் வரை பிரஷாந்த் காட்டில் மழைதான்..!