என் மகள் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி.. நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை
மகள் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.
சென்னை: தன்னுடைய மகள் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான ஒரு கடிதமும் ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
"என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள்,காவல்துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என்று தெரிவித்து அன்புடன் ரஜினிகாந்த் என்று கையெழுத்து போட்டுள்ளார்.