கூடாத கூட்டமும் இல்லை... தேடாத புகழும் இல்லை... எல்லாம் மாயமாகிய கி"ராமராஜன்" கதை!
சென்னை: தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி சுவட்டை பதித்து ராமராஜன் தொடாத உச்சமும் இல்லை, தேடாத புகழும் இல்லை.
ஒரு காலத்தில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த ராமராஜனுக்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொலைக்காட்சிகளில் அவர் நடித்த திரைப்படங்களை பார்ப்பவர்கள் ஏராளம்.
காரணம் நீ டவுசர் ரசிகனா என யாரும் ஏளனம் செய்வார்களோ என்ற அச்சமும், தயக்கமும் தான்.
கர்நாடகாவில் ரூ. 2,000 கோடிக்கு ஊழல்...பாஜக அரசு மீது காங்கிரஸ் எழுப்பும் புதிய பூதம்...!!
மேலூர் மைந்தன்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராமையா என்ற நாடக நடிகரின் மகன் தான் இந்த ராமராஜன். பள்ளிக்கல்வியை மேலூர் அரசுப் பள்ளியில் முடித்த இவருக்கு அங்குள்ள திரையரங்கு ஒன்றில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் பணி கிடைத்தது. சிறிது காலம் சினிமா டிக்கெட் கிழித்துக் கொடுத்த இவர் ஆப்ரேட்டர், கேஷியர் என படிப்படியாக உயரத்தை எட்டினார். பள்ளிப்பருவம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்த இவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களை சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடியவர். ராமராஜனுக்குள் இருந்த சினிமா மோகத்தை அறிந்த அவரது நண்பர்கள் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்கள்.
உதவி இயக்குநர்
எம்.ஜி.ஆரை போல் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்திறங்கிய ராமராஜனுக்கு காலம் அவ்வளவு எளிதாக ஏற்றத்தை கொடுக்கவில்லை. புரொடக்ஷன் பாயாக பணியில் சேர்ந்து தயாரிப்பாளரும், இயக்குநருமான ராமநாராயணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ராமநாராயணனும் பக்கத்து ஊர் பையன் என்ற அடிப்படையில் ராமராஜனை உதவி இயக்குநராக தன்னுடன் 25-க்கும் மேற்பட்ட படங்களில் உடன் வைத்துக்கொண்டார்.
கிராமத்து நாயகன்
சினிமாவில் தொழில் கற்றுக்கொண்ட ராமராஜன் சொந்தமாக திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துகொண்டார். ஒரு சில படங்களை இயக்கிய அவர், நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக ஹீரோவாகினார். ராமராஜனின் கிராமத்து சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும், சினிமாவில் அவருக்கென தனி கூட்டத்தை உருவாக்கியது. கூடவே அவர் அணியும் கலர் கலரான சட்டையும், உடல் மொழியும் எம்.ஜி.ஆரை. பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.
கால்ஷீட் புல்
ராமராஜனின் வளர்ச்சிக்கு அவர் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் அதற்கு இசையமைத்த இளையராஜவும் மிக முக்கிய காரணம். ரஜினி, கமலுக்கு இணையாக தமிழகம் முழுவதும் ராமராஜனுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின. ராமராஜன் மன்றம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை 90-களின் பிற்பகுதி வரை இருந்தது. 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளும் ராமராஜனின் கால்ஷீட்கள் நிரம்பி வழிந்தன. வருடத்திற்கு 8 படங்கள் வரை ராமராஜனின் நடிப்பில் வெளியாகிய காலம் அது. அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படமெல்லாம் 500 நாட்களை கடந்தும் தமிழகத்தில் ஓடியது.
கூடாத கூட்டம்
இப்போது உள்ள தயாரிப்பாளர்களை போல் புரோமோஷன், நொடிக்கு நொடி தொலைக்காட்சிகளில் விளம்பரம் என்றெல்லாம் அந்தக்காலத்தில் எந்த தயாரிப்பாளரும் மெனக்கெட்டது கிடையாது. முழுக்க முழுக்க கதையையும், கதாநாயகனையும் நம்பி படத்தை தயாரித்தார்கள். ராமராஜனின் சென்னை சாலிகிராமம் இல்லத்தின் முன்பு அவரைக் காண கூடாத கூட்டமில்லை 90களில் தேடாத புகழும் இல்லை. இப்படிப்பட்ட ராமராஜனை தான் காலம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் மாற்றியுள்ளது.
திருச்செந்தூர் எம்.பி.
எம்.ஜி.ஆர். மீது அபிமானம் கொண்ட ராமராஜன் அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணியில் இணைந்துகொண்டார். அதற்கு பரிசாக கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் ராமராஜனை போட்டியிட வைத்து டெல்லிக்கு எம்.பி.யாக அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. மத்தியில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததால் 13 மாதத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிகொடுத்தார் ராமராஜன்.
2000-ல் விவாகரத்து
அரசியலில் எம்.பியாக உச்சம் தொட்ட ராமராஜனை அடுத்தடுத்து சோகங்கள் துரத்தியது. 2000-ம் ஆண்டு தனது காதல் மனைவி நளினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். இதனிடையே தமிழ் சினிமாவின் டிரெண்டிங் மாறத் தொடங்கியதால் ராமராஜனின் புகழ் மெல்ல மங்கத் தொடங்கியது. ஊரெங்கும் இருந்த அவரது ரசிகர் மன்றமும் மாயமாய் மறைந்து போனது. இந்நிலையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்குமாறு எத்தனையோ இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தன்னை அணுகியும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என உறுதியாக கூறி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை ஓரங்கட்டினார்.
பிள்ளைகள் திருமணம்
பிள்ளைகள் வளர்ந்துவிட்டதை அடுத்து மனைவி நளினியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து விவாகரத்து பெற்ற நிலையிலும் தனது மகன், மகள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். நடித்தால் ஹீராவாக தான் நடிப்பேன் என்ற வைராக்கியம் கொண்ட இவர், தற்போது முழு நேர அரசியல்வாதியாக அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக உள்ளார்.
கலர் கலர் ஆடைகள்
ராமராஜன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மேதை என்ற திரைப்படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. ஒரு காலத்தில் வருடக்கணக்கில் ஓடிய ராமராஜன் படம் ஒரு வாரம் கூட ஓடாதது காலச்சக்கரம் எப்படி சுழல்கிறது என்பதற்கான அடையாளச் சான்றாகும். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற ராமராஜனின் டவுசர் காஸ்டியூமும், காலமெல்லாம் அவர் அணியும் கலர் கலரான ஆடைகளும் காலத்தால் அழியாத புகழை அவருக்கு ஈட்டிக்கொடுத்துள்ளது.