சர்ச்சையில் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'... சாதி பற்றி பேசிய நையாண்டி நாயகன் சந்தானம்
Recommended Video
சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள அக்யூஸ்ட் ஒன் என்கிற படத்தில், குறிப்பிட்ட சாதி குறித்து இழிவுபடுத்திப் பேசி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்படிப் பேசினால் தான் காமெடி வரும் என்று நடிகர் சந்தானம் மேடையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
'தில்லுக்கு துட்டு 2'. படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது.
சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இந்தப் படம், நாளை (26 ந்தேதி) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. காவல்நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
'அக்யூஸ்ட் ஒன்' என்கிற படத்தின் முன்னோட்ட காட்சியில் லோக்கல் பையனுக்கும், அக்ரஹாரப் பெண்ணுக்கும் காதல், காதலை நிரூபிக்க ஆம்லேட் சாப்பிடும் மாமி, மயங்கி விழும் தோப்பனார் என்பது போன்ற வசனக் காட்சிகள் இடம் பெற்றதற்காக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், 'அக்யூஸ்ட் ஒன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் சந்தானம், சம்பந்தப்பட்ட சாதியின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டு, இரு நேர் எதிர் தரப்புகளை கலாய்த்தால்தான், சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சந்தானம், தனக்கு எதிராக புகார் தெரிவித்தவர்களை சீப் பப்ளிசிட்டி என்றும் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.