7 தமிழர் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்கும் அற்புதம்மாள்.. துணை நிற்க சத்யராஜ் அழைப்பு
அற்புதம்மாளின் நடைபயணத்துக்கு துணை நிற்போம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: 7 பேர் விடுதலைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அற்புதம்மாளுக்கு துணை நிற்போம் என்று நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் கைதாகி 7 தமிழர்கள் கடந்த 28 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இது சம்பந்தமான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
வேண்டுகோள்
இதனால் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஆளுநருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்கள். பேரறிவாளனின் அற்புதம்மாளும் ஆளுநரை நேரில் சந்தித்து தனது 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
சுற்றுப்பயணம்
அதுமட்டுமல்லாமல், தன் மகன் விடுதலையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து, சளைக்காமல் முன்னெடுத்து வருகிறார் அற்புதம்மாள். இன்று மாலை 7 பேர் விடுதலையை வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை இன்று மாலை கோவையிலிருந்து அற்புதம்மாள் துவங்கி தமிழகம் முழுவதும் சென்று 7 பேர் விடுதலை குறித்து பொதுமக்களிடமே நீதி கேட்க இருக்கிறார்.
வீடியோ வெளியீடு
அற்புதம்மாளின் இந்த நடவடிக்கையை நடிகர் சத்யராஜ் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே 7 பேர் விடுதலையை வலியுறுத்தி வருபவர் சத்யராஜ். இவர்களின் விடுதலை தொடர்பாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என்றால் முதல் ஆளாக நிற்பது சத்யராஜ்தான். இப்போது அற்புதம்மாளின் சுற்றுப்பயணத்துக்கு வாழ்த்து சொல்லி வீடியோவை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
துணை நிற்போம்
அதில், " பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் இந்த ஏழு பேரும், 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளார் அற்புதம்மாள். இதில், அவருக்கு நாம் துணை நின்று, எழுவர் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.