எதா இருந்தாலும் சரி.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுதான்.. சித்தார்த்துக்கு!
நடிகர் சித்தார்த் தன் கருத்துக்களை துணிவுடன் சொல்பவர்.
Recommended Video
சென்னை: திரையுலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் வாய்மூடி கிடக்க... சின்மயிக்கு முதல் ஆதரவு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்தை மனம் திறந்து பாராட்டியே ஆக வேண்டும்.
நடிகர் சித்தார்த் நடிப்பையும் தாண்டி சமூக வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாகவே இருப்பார். சில சமயங்களில் ரசிகர்களுடன் பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும், கிண்டல் செய்து வந்தாலும் பெரும்பாலான இவரது ட்வீட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கின்றன. அதோடு அந்த டவீட்கள் தைரியத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும்.
[இளசுகளை வளைத்து போட்ட ரூபி மசாஜ் சென்டர்.. 3 பேர் கைது]
களத்தில் இறங்கினார்
அவரது வீட்டு கழிவறைக்குள் கழிவு நீர் சாக்கடை தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அதன் கீழே ''நான் ஒரு வசதி படைத்த நடிகர். எனது வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?'' என்று கேள்வி கேட்டிருந்தார். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தனது கருத்தினை தெரிவித்ததோடு சித்தார்த் நிறுத்திக் கொள்ளவில்லை. களத்திலும் இறங்கியும் பணியாற்றி காட்டினார்.
நாணயமற்றது
அடிக்கடி சமூக அவலங்களை இவர் தன்து கருத்துக்களில் பதிவிட்டு வந்தாலும் இவரது ஒரு ட்வீட் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின்போது பாபா ராம்தேவுக்கு அளித்த பதிலடிதான். "முதலமைச்சரின் அலுவலகம் நாணயமற்ற ஒன்று. யோகாவைத் தவிர பிரதமரின் அலுவலகம் வேறு எதற்கும் வாய் திறக்காது. தாமிர உருக்கின் பயன்களை பட்டியலிட இது நேரமில்லை. மக்கள் போலீஸாரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். குடிமக்களை சுடுவது என்பது கொலையாகும். இப்போது அதைப் பற்றி பேசுங்கள்" என்றார்.
ட்ரம்பை கூட விடவில்லை
அதோபோல, எச்.ராஜாவின் விநாயகர் ஊர்வல பேச்சிற்கு "போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீசார், நீதிமன்றம், போலீஸ் மற்றும் சிறுபான்மையினர் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கின்றனர். இந்த இந்துத்துவா பயங்கரவாதி எச்.ராஜா சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பார்க்கிறார். இது வெட்கக்கேடானது ' என்றார். இப்படி சித்தார்த் கடுமையாக விமர்சித்து பதிவிட்டவர்கள் எல்லாமே பெரும்புள்ளிகள்தான். அவ்வளவு எதற்கு ட்ரம்ப்பை கூட விட்டுவைக்கவில்லை சித்தார்த்.
ஒரே நடிகர் சித்தார்த்
தற்போது சின்மயி - வைரமுத்து விவகாரத்தை பொறுத்தவரையில், அது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்குள் நுழைய தேவையில்லை. யார் மீது சரி, தவறு என்பது முழுமையாக தெரியாமல் அதை ஆராயவும் தேவையில்லை. ஆனால் சின்மயியின் குற்றச்சாட்டை பொறுத்தவரை முதல் நடிகராக ஆதரவு கரம் நீட்டி குரல் கொடுத்துள்ளது சித்தார்த் மட்டும்தான்.
எத்தனை நாட்கள் மவுனம்?
சின்மயிக்கு ஆதரவாக சொன்னது அவரது தனிப்பட்ட விருப்பம், கருத்தாக இருக்கலாம். அதை நாம் விமர்சிக்க உரிமை இல்லை. "கடலுக்குள் மீன் ஒன்று அழுதால் கரைக்கு செய்தி வந்து சேருமா?" என்றும், "இன்னும் எத்தனை நாட்கள் மவுனம் காக்க போகிறீர்கள் தமிழ் திரை உலகினரே" என்றும், "ஒரு வேளை இன்னொருவரின் பெயர் வெளியே வரட்டும் என எதிர்பார்க்கின்றனரோ" எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதனுடன், சிஸ்டம் மாறவேண்டும் என்றும், வெளியிடங்களில் பணிபுரிகின்ற அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கப்சிப் திரையுலகம்
போராட்டம், உண்ணாவிரதம் என்றால் நடிகைகளே இல்லாத கருப்பு சட்டை அணிந்த நடிகர்கள் கூட்டம் மட்டும்தான் நடக்கும். ஒரு சமூக, அரசியல் பிரச்சனையை ஒருத்தர் வாய்திறந்தால்தான் இன்னொருத்தர் அதை பற்றி பேசுவது! இல்லையென்றால் கப்சிப்தான்!! இவ்வளவு நாசூக்காக நடந்து கொள்ளும் போக்கினை தமிழக ரசிகர்கள்தான் உற்று நோக்க வேண்டியது அவசியம்! தன் துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், விவகாரங்கள், விமர்சனங்கள் குறித்தே வாய் திறக்க நினைக்காதவர்கள், எப்படி அரசியலுக்கு வந்து மக்கள் பிரச்சனையை கவனிப்பார்கள்? என்று பல கேள்விகள் எழுந்து செல்கிறது.