புயலை கிளப்பும் தாக்ரே ட்ரைலர்.. தென் இந்தியர்களை எப்படியெல்லாம் அவமதிக்கிறது பாருங்கள்
Recommended Video
சென்னை: மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரே வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'தாக்கரே' டிரைலரால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சிவசேனா எம்.பியான, சஞ்சய் ரவுத் எழுத்து மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'தாக்கரே' திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 26ம் தேதி வெளியானது.
இதில் பால்தாக்கரே கதாப்பாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளிலும் டிரைலர் வெளியாகி இருந்தது.
இந்த டிரைலரை பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இதில் தமிழர்கள், மலையாளிகள் மற்றும் கன்னடர்கள் என மொத்த தென்னிந்தியர்களும், மும்பையை ஆக்கிரமித்துக் கொண்டதாக குற்றம்சாட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மும்பையில் பெரும்பாலான இடங்களில் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது, கடைகளின் பெயர் தமிழில் சூட்டப்பட்டு இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
உளவியல்
ஒரு காட்சியில் இளம் வயதுடைய பால்தாக்கரே நடந்து செல்லும்போது, எதிரே வரும் மலையாளி அவர் மீது மோதி விட்டு அவரை, மலையாளத்தில் திட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியின் மூலம் தென்னிந்தியர்கள் மும்பையை, ஆக்கிரமித்துக்கொண்டு மராத்தியர்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு இட நெருக்கடி கொடுக்கின்றனர் என்ற உளவியல் தாக்கம் முன்வைக்கப்படுகிறது.
|
லுங்கியை தூக்கி அடிக்க வேண்டுமாம்
இதன் பிறகான காட்சிகளில் தென்னிந்தியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சுக்களை கட்டவிழ்த்து விடுகிறார் பால் தாக்கரே கதாப்பாத்திரம். அதிலும், "லுங்கியை தூக்கி விட்டு அடிக்க வேண்டும்" என்பதுபோன்ற முகம் சுழிக்க வைக்கும் வசனம், மராத்தி டிரைலரில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியின் உச்சம். மராத்தி டிரைலரில் சப்டைட்டில் இல்லாமல் இதுபோன்ற வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், ஹிந்தி டிரைலரில் அது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.
கன்னடர்களுக்கு எதிரான காட்சி
மற்றொரு காட்சியில் பால்தாக்கரே பேச்சை கேட்டு ஆக்ரோஷமடையும், நபர், உடுப்பி ஹோட்டல் என்ற பெயரிலான ஹோட்டலை கல்வீசி தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அனைத்துமே தென்னிந்தியர்களை குறிவைத்து வெறுப்பை விதைக்கும் காட்சிகளாக உள்ளன. பால்தாக்கரேவின் அரசியல் அப்படிப்பட்டதுதான் என்ற போதிலும், அதை திரையில் மகிமைப்படுத்த தேவை இருந்திருக்கவில்லை. ஆனால் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தயாரிக்கும் இந்த படத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில்?
வெறுப்பு விற்பனைக்கு
இதனிடையே தாக்கரே படத்தின் டிரைலரை வெறுப்பை விற்பனை செய்து காசாக்கும் செயல் என்று நடிகர் சித்தார்த் கண்டனம் செய்துள்ளார் மராத்தி மொழி டிரெய்லரில் மட்டும் தென்னிந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு டயலாக்குகள் திட்டமிட்டு இடம்பெற செய்து இருப்பதையும் அவர் சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் நடிகரை தாக்கரே வேடத்தில் நடிக்க வைத்திருப்பதன் மூலம், வெறுப்பு பேச்சுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி நடந்துள்ளது என்பதையும் அவர் மற்றொரு ட்வீட்டில் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
வெறுப்பு
தென்னிந்தியர்களை மட்டுமல்லாது முஸ்லிம்கள் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தவர்களுக்கு எதிராகவும் பால்தாக்கரே வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தவர். மும்பையில் வேலைவாய்ப்பு, நிலம் உள்ளிட்ட அனைத்தையும் தென்னிந்தியர்களும், வட இந்தியர்களும் பறித்துக் கொண்டதாக குற்றம் சாட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.