அண்டா அண்டாவாக பால் அபிஷேகம்.. நான் சொன்னதன் அர்த்தம் வேறு.. மன்னிப்பு கோரினார் சிம்பு
Recommended Video
சென்னை: அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எனவே நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் சிம்பு பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் என திரைப்படம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு வீடியோவில் தோன்றிய சிம்பு, எனது திரைப்படம் வெளியாகும்போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள். கட் அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என கூறியிருந்தார்.
இதற்கு பால் முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க காவல் துறையிடம் பாதுகாப்பும் கோரியிருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம். பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என கூறியிருந்த சிம்பு தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதால் பரபரப்பு எழுந்தது.
ஆஹா.. என்ன இது.. புதுஸ்ஸா இருக்கே.. நடுக்கடலில் சிம்பு பேனருக்கு பாலாபிஷேகம்! #புதுச்சேரி
9 மாதங்களுக்கு பிறகு ஆறுதல்
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சிம்புவுக்கு கட்அவுட் வைத்து தவறி கீழே விழுந்த மதன் இறந்தார். இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள அவரது குடும்பத்தினரை 9 மாதங்களுக்கு பிறகு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் துக்கம் தாளாமல் சிம்பு கதறி அழுதார்.
வள்ளலார் மொழி
இதையடுத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது சிம்பு கூறுகையில், நான் எனது ரசிகர் உயிரிழந்ததால் வேதனையில் உள்ளேன். அதற்காக ஆறுதல் சொல்ல வந்தேன். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் மொழியை மறப்பதில்லை.
அண்டா அண்டாவாக பால்
பால் அபிஷேகம் செய்வதை நிறுத்துங்கள் என கூறிவருகிறேன். ஆனால் ரசிகர்கள் கேட்பதில்லை. மேலும் நான் அண்மையில் கூறியது எனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய சொல்லவில்லை. மாறாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவோருக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று கூறினேன்.
நெகட்டிவாக பேசிய சிம்பு
எனது செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாலாபிஷேகம் செய்யாதீர் என பாசிட்டிவாக சொன்னால் ரசிகர்கள் கேட்பதில்லை. அதனால் நெகட்டிவாக பேசினால்தான் அதிக பேரை சென்றடையும் என்பதால் கிண்டலாக கூறினேன்.
மன்னிப்பு
அது ரசிகர்களை சென்றடையாமல் போய்விட்டது. நான் நெகட்டிவாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நான் கூறியதன் அர்த்தம் வேறு. எனினும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் சிம்பு.