ஆரம்பிச்சிட்டாங்க சிம்பு ரசிகர்கள்.. கட்அவுட்டுக்கு அண்டா நிறைய பாலாபிஷேகம்
சென்னை: நடிகர் சிம்பு கோரிக்கையை ஏற்று, அவரது கட்அவுட்டுகளுக்கு ரசிகர்கள் அண்டாவில் பாலாபிஷேகம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பொங்கல் அன்று ட்விட்டரில் வாழ்த்து கூறிய நடிகர் சிலம்பரசன், தனது ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகளை வழங்கினார்.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற பெயரில், சிம்பு நடித்த திரைப்படம் பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது . எனவே, பாலாபிஷேகம் பெரிய பெரிய கட்அவுட் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, சகோதர சகோதரிகளுக்கு முடிந்ததை செய்யுங்கள் என்று அன்புக் கோரிக்கை விடுத்திருந்தார் சிம்பு.
அண்டா, அண்டா
ஆனால் இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தனர். ரசிகர்கள் இல்லாத சிம்புவிற்கு இந்த வெட்டி விளம்பரம் தேவைதானா.. என்றெல்லாம் கேள்விகளை கேட்டு நையாண்டி மீம்ஸ்களை உலவ விட்டனர். இதனால் கோபம் அடைந்த சிம்பு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், இதுவரை இல்லாத அளவிற்கு கட்அவுட் பேனர் வையுங்கள், பாக்கெட்டில் வேண்டாம்.. அண்டா அண்டாவாக பாலை ஊற்றுங்கள்.. என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டார். இது தன்னுடைய அன்பு கட்டளை என்றும் அவர் கூறினார்.
கிண்டல்
எனக்கு தான் யாருமே இல்லையே, இருப்பது ஒன்றிரண்டு பேர் தானே.. அதனால் நீங்கள் செய்வதால் பெரிய தப்பு ஒன்றும் வந்துவிடாது, என்பதற்காகத்தான் நான் இதைக் கூறுகிறேன்.. என்று சிம்பு தனது வீடியோவில் தெரிவித்து அவரை விமர்சனம் செய்தோருக்கு பதிலடி கொடுத்து இருந்தார்..
|
போலீசில் புகார்
இதனிடையே தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் சிம்புவின் இந்த கோரிக்கைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிம்புவின் இந்த கோரிக்கையால் பால் முகவர்களிடம் இருந்து பால் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் இப்போது சிம்புவின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து அந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வெளியிட தொடங்கியுள்ளனர். நீங்கள் இப்பொழுது பார்ப்பதும் அப்படியான ஒரு வீடியோ பதிவை தான்.
சிம்பு மீது எதிர்பார்ப்பு
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பசியாற்றக்கூடிய, பால் இப்படி வீணாக தெருவில் கொட்டப்படுவதை தடுக்க சிம்பு நடவடிக்கை எடுப்பாரா? மீண்டும் கோரிக்கை விடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு வீடியோ வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. சமூக பிரச்சினைகளில் முன்னின்று கருத்து கூறிவரும் சிம்பு, இந்த விஷயத்தில் கட்டாயம் நல்ல தீர்வுக்கு வருவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.