டி ராஜேந்தர் வயிற்றில் ரத்தக் கசிவு.. சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை
சென்னை: நடிகர் டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
1980 களில் நிறைய படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் டி ராஜேந்தர். இவர் பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், திரைப்பட விநியோகஸ்தர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றவர்.
இவர் முன்னாள் எம்எல்ஏவும் கூட!. மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது லட்சிய திமுக சார்பில் வேட்பாளர்களை களமிறக்கவும் முடிவு செய்திருந்தார்.
நடிகர் டி ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தவிப்பில் ரசிகர்கள்
4 நாட்கள்
இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு கடந்த 4 நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வயிற்று வலி என்று தகவலறிந்த சிலர் கூறுகிறார்கள்.
ரத்தக் குழாய்
மேலும் அவருக்கு இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் நல்ல முறையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
அடுக்கு மொழி பேச்சு
மேலும் அவரை சிம்பு விமானம் மூலம் சிங்கப்பூர் அழைத்து செல்லவும் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் வெளிநாட்டு சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. தனது அடுக்குமொழி பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுத்த டி ராஜேந்தருக்கு என்னாச்சு என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
சிம்பு அறிக்கை
அது போல் சிம்புவின் ரசிகர்களும் அவரது அப்பாவுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என பதறி வருகிறார்கள். எனவே இது போன்ற பதற்றங்களை போக்க நடிகர் சிம்பு இன்றைய தினம் மருத்துவ அறிக்கையை வெளியிடுவார் என காலையிலேயே ஒரு தகவல் பரவியது. அதன்படி சிம்பு தனது ட்விட்டரில் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது ஆரூயிர் ரசிகர்களுக்கும் அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்,
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுயநினைவுடன், நலமாக இருக்கிறார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.