ஏய் செல்லா.. போய்ட்டானா.. ஆத்தை விட்டே போய்ட்டானா.. மறக்க முடியாத சிம்மக்குரலோன்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது
Recommended Video
சென்னை: காவிரி பெற்றெடுத்த பிறவிக் கலைஞர்களில் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை நினைவுகூர்வதில் ஒன்இந்தியா தமிழ் பெருமை கொள்கிறது.
சிவாஜி கணேசன்... சின்ன வயதில் படிப்பில் நாட்டமே இல்லை. ஆனால் பிறவியிலேயே அசாத்தியமான இரண்டு திறமைகள் இருந்தன. அதில் ஒன்று மனப்பாட பயிற்சி!
எத்தனை பக்க வசனங்கள் இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை சிறிதும் பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல்தான் அவரது முன்னேற்றத்தின் முதல் பலமே. சுருக்கமாக சொன்னால், இப்போது கல்வி அமைப்பில் மாணவர்கள் உருப்போடுகிறார்களே,அந்த திறன்தான்! சிவாஜி கணேசன் மட்டும் தனது உருப்போடும் திறனை கல்வியில் செலுத்தியிருந்தால் 60'களிலேயே மிகச்சிறந்த கல்விமானாக திகழ்ந்திருப்பார்.
கருணாநிதி
இரண்டாவது திறமை... சிறந்த நடிப்பாற்றல்! நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன். கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பானது, அவரது எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றியது. சிவாஜி கணேசனை திரையுலகில் அறிமுகம் செய்ததிலும், கதாநாயகனாக உயர்த்தியதிலும் கருணாநிதிக்கு தனி பெரும் பங்கு உண்டு.
கர்ஜனை
'பராசக்தி' படத்திற்கு பிறகு ஒரு புல்லைபோல் பிரவேசிக்க தொடங்கினார் சிவாஜி கணேசன். இதன்பிறகு தான் அறிமுக - புதுமுக வெள்ளம் ஒன்று தமிழகம் முழுவதும் ஊடுருவி கரைபுரண்டு பாய தொடங்கியது. தொய்வுடன் தொங்கி கொண்டிருந்த தமிழ்த்திரையுலகம் சிவாஜியின் வருகைக்கு பின்னர் கர்ஜித்து எழுந்து மிரட்டலுடன் ஓடத் தொடங்கியது.
மேக்-அப்
சிவாஜியின் டிரஸ், மேக்கப் வைத்தே படத்தின் பெயர்களை எளிதாக கூறிவிடலாம். அந்த படத்தின் கேரக்டரை பார்த்த உடனேயே இனம் கண்டுவிடலாம். ராணுவ வீரனா, அது பதிபக்தி, தொழிலதிபரா அது 'பாசமலர்', இஸ்லாமிய இளைஞனா, அது 'பாவமன்னிப்பு', பணச்செருக்கு தந்தையா அது 'பார் மகளே பார்', பாதிரியார் உடையா, அது 'வெள்ளைரோஜா'.. இப்படித்தான் சிவாஜி கணேசன் ரசிகர்களின் மனதில் பிரிக்க முடியாத அளவிற்கு படிந்துவிட்டார்.
கட்டபொம்மன்
கட்டபொம்மனையோ, கர்ணனையோ, சிவபெருமானையோ நாம் நேரில் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட நமக்கு தெரியாது? அதற்கு எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை. அதற்கு இனியும் ஒருகாலும் வாய்ப்பும் இல்லை. ஆனால் நமக்கு சிவாஜி கணேசனை தெரியும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
கெத்து இல்லை
சிவாஜிக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலையெல்லாம் கிடையாது. இப்போதுள்ள ஹீரோக்களை போல, ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், சாகசங்கள் செய்து ஒரு ஆல் டைம் ஹீரோவாகவே உலா வரவேண்டும், கெத்து காட்ட வேண்டும், இப்படியெல்லாம் யோசித்ததே கிடையாது, அப்படி கேரக்டர்கள்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் கிடையாது. நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, போலீஸோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்த அசாத்திய கலைஞன்!
பிறவி கலைஞன்
ஒரு கலைஞன் எந்த கேரக்டர் தந்தாலும் அதனை கொஞ்சமும் தயங்காமல் ஏற்று செய்வதே நிஜமான கலைஞன் என்பதில் சிவாஜி கணேசன் பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருந்தார். அதனால்தான் அவரது தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லியது. வாய்திறந்து இவர் பேச வேண்டிய அவசியமே இல்லை.
முதல் மரியாதை
கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ள அள்ள கொடுத்துவிட்டு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்டுவிட்டு போகும். இது அவரது இறுதிகால கட்ட படங்களிலும் பளிச்சிட்டது. குறிப்பாக, முதல்மரியாதை. ஆயிரமாயிரம் ஆசைகளை உள்ளத்தில் தேக்கி வைத்து, பரிதவித்து, அதே நேரத்தில் ஆபாசமோ, விரசமோ இல்லாமல் கண்ணியத்துடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நம் சிவாஜிகணேசனை தவிர யாரால் முடியும்?
உணர்ச்சி குவியல்
உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் சிவாஜிகணேசன். எல்லாவித உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்துவிட்டார். இந்த சினிமா உலகம் இதே பூமிப்பந்தில் வாழும்வரை, சிவாஜிகணேசனின் புகழும் ஜொலித்துக் கொண்டே இருக்கும்.