அரசுக்கு குவியும் உதவிகள் .. சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், ஜெயம் ரவி ரூ.10 லட்சம் நிதியுதவி!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகத்துக்கு கொரோனா நிதி உதவியாக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
கொரோனா பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தொழில் அதிபர்கள் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் சிவகுமார் குடும்பம் ரூ. கோடி நிதி உதவி செய்தது. நடிகர் அஜித் ரூ.25 லட்சம் வழங்கினார். நடிகர் ஜெயம் ரவி ரூ.10 லட்சமும், இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா நிதி உதவியாக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிவகார்த்தியேகன் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.