அம்மா.. சூர்யா அண்ணன் இங்கே வந்திருக்காரு.. நா தழுதழுத்த மாணவி.. அடக்க முடியாமல் அழுத சூர்யா
அகரம் அறக்கட்டளை மாணவியின் உருக்கமான பேச்சு வைராகி வருகிறது
Recommended Video
சென்னை: "பாப்பா.. நீ பேசறதை அம்மாவால கேட்க முடியலயேடா..ன்னு என் அம்மா சொன்னாங்க.. பரவாயில்லம்மா.. இங்க சூர்யா அண்ணன் வந்திருக்காரு.. அவர் முன்னாடி நான் பேச போறேன்.. நீ செல்போன்ல நான் பேசறதை கேளும்மான்னு சொன்னேன்" என்று அகரம் அறக்கட்டளை மாணவி பேசியதும், நடிகர் சூர்யா கண்கலங்கி போய்விட்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா.. பல்வேறு சமூக பிரச்சனைகளை களைய அக்கறை காட்டி வருபவர். நடிப்பை தவிர விவசாயிகள் பிரச்சனை, ஏழை மாணவர்களின் படிப்பில் தனி கவனம் செலுத்தி வருபவர்.. இதற்காகவே அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார்.
ஏதோ ஒரு கிராமத்தின் மூலை முடுக்குகளில் உள்ள எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு இந்த அகரம் அறக்கட்டளை ஒரு அடையாளத்தை தந்து வருகிறது.. இந்த மாணவர்களின் கஷ்டத்தை, அவலத்தை நேரடியாக பார்த்த பாதிப்போ என்னவோ, புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சும் நிறைய விவாதத்தை ஏற்படுத்தியது.
அமைச்சர் செங்கோட்டையன்
இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் "வித்தியாசம் தான் அழகு", "உலகம் பிறந்தது நமக்காக" என்ற 2 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யாவும் இதில் பங்கேற்றார்.
தஞ்சை மாவட்டம்
அப்போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை மாணவி தன் அனுபவத்தை, தன் கல்வி கனவு நனவாகியதை பற்றி பேச வந்தார்... மிக மிக எளிமையான, இயல்பான தோற்றத்தில் அந்த பெண் பேசிய பேச்சு அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தியது.. யதார்த்த பேச்சுதான்.. ஆனால் ஆழமான பேச்சு.. திடமான பேச்சு.. சிறிதும் பிசிறில்லாமல், தைரியமான பேச்சு.. எத்தனையோ மாணவர்களுக்கு ஊக்கமும்-உத்வேகமும் தரும் பேச்சு அது!
ரத்தவாந்தி
மாணவி பேசும்போது, "என் அப்பா ஒரு கிணறு வெட்டும் தொழிலாளி.. ரத்த ரத்தமா வாந்தி எடுத்தாரு.. தூக்கு போட்டு செத்துடலாம்னு நினைச்சு ரூமுக்குள்ள போனாராம்.. ஆனால், தூக்கில தொங்கிறதை பார்த்து என் தம்பி பயந்துடுவான்னு நினைச்சு.. என் அப்பா அழுதுட்டே திரும்பி வந்துட்டாராம்.. இதை என்கிட்ட அப்பாவே சொல்லி அழுதாரு.. அப்பறம் ரத்த ரத்தமா வாந்தி எடுத்து இறந்துட்டாரு.. என் அம்மா தினக்கூலி வேலை செய்றாங்க.." என்று இந்த மாணவி தன் வீட்டு தரித்திர சூழல்களை புட்டு புட்டு வைத்தார்.
மாணவி
தொடர்ந்து பேசிய மாணவி, "என்னடா வாழ்க்கை இது.. இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்பட்ட சமயம்தான், எனக்கு அகரம் அறக்கட்டளை கை கொடுத்து மேலே தூக்கிவிட்டது.. எனக்கு இங்கிலிஷ் தெரியாது.. கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எப்படி டிரஸ் பண்ணிக்கணும்னு தெரியாது.. பல சமயம் நான் கூச்சத்தோடு ஒதுங்கினேன்.. என்னை நிறைய பேர் ஏளனமா பார்த்தாங்க.. அப்பதான் நான் துணிச்சலா பிஏ இங்கிலீஷ் எடுத்து படிச்சேன்.. இப்போ ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன்னா அதுக்கு இந்த அகரம்தான் காரணம்" என்று பெருமிதத்துடன் எடுத்து கூறினார்.
சூர்யா அண்ணன்
மாணவி பேச பேச.. சூர்யாவின் கண்ணில் தாரை தாரையாக நீர் கொட்டியது.. பக்கத்தில் இருந்த அமைச்சர் செங்கோட்டையனும் கண்கலங்கினார்.. இறுதியில் அந்த மாணவி பேசும்போது, "நான் இப்படி பேசுறதை கேட்க என் அம்மாவுக்கு ரொம்ப ஆசை.. ஆனா அவங்களால வர முடியல.. "உன் பேச்சை கேட்க முடியலயே பாப்பா"ன்னு சொன்னாங்க.. அதுக்கு நான், "பரவாயில்லைம்மா.. நான் பேசறதை செல்போன்ல கேளு.. இங்க சூர்யா அண்ணன் வந்திருக்காரும்மா.. நான் பேசறதை கேட்க போறாரும்மா' என்று சொல்லும்போதுதான் அந்த பெண்ணின் குரல் உடைந்து கம்மியது.
வைரல் வீடியோ
அதுவரை உட்கார்ந்து கண்கலங்கி பார்த்து கொண்டிருந்த சூர்யா, அதற்கு மேல் உட்கார முடியாமல் எழுந்து வந்து மாணவியை அரவணைத்து கொண்டார்.. மாணவியின் கண்களிலும் கண்ணீர்,.. சூர்யாவின் கண்களிலும் கண்ணீர்.. சுற்றியிருந்தவர்களும் கலங்கி விட்டனர்.. மாணவிக்கு ஆறுதல் சொல்லியபிறகுதான் சூர்யா வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். இந்த நெகிழ்ச்சி வீடியோதான் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.