அச்சு, அசலாக கமல்ஹாசன் போலவே.. சினிமாவில் சொன்னவை அப்படியே நடக்கிறது.. நவீன 'நாஸ்டர்டாமஸ்' சூர்யா!
சென்னை: கடல் அலைகள் எப்படி உயர்ந்து வரும் தெரியுமா.. என்று அன்பே சிவம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சுனாமி பற்றி பேசிய அடுத்த வருடமே, தமிழகம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றையும் சுனாமி சுருட்டி தள்ளியது.
Recommended Video
அதே, அன்பே சிவம் திரைப்படத்தில் இனிமே எல்லாமே கார்டுதான், பணப் பயன்பாடு கிடையாது என்று ஒரு வசனம் வரும். இப்போது நாம் டிஜிட்டல் இந்தியா என்ற இடத்தில் இருக்கிறோம். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதையும் அறிவோம்.
தசாவதாரம் திரைப்படத்தில், எப்படி ஒரு வைரஸ் உலகை அழிக்கும் வீரியம் கொண்டது என்பதையும், அதை எப்படி செயலிழக்க வைப்பது என்பது பற்றியும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதுதான் கதையின் மையக்கரு.
காணொலி மூலம் புகார்கள்.. முன்மாதிரி முயற்சி.. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆன்லைனில் புதுப்படங்கள்
விஸ்வரூபம்-1, திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பாக, டிடிஎச் மூலமாக புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்யலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். அப்போது உலகம் ஏற்கவில்லை. இப்போது ஆன்லைன் தளங்களில் புதுப்படங்கள் ரிலீஸ் கோலாகலமாக ஆரம்பித்துள்ளன.
இது மட்டுமல்ல பல்வேறு திரைப்படங்களில் கமல் பேசிய வசனங்கள் பிற்காலத்தில் நடந்துள்ளன. அதனால்தான், கமல்ஹாசன், நவீன உலகின் நாஸ்டர்டாமஸ் என்று புகழப்படுபவர். அந்த வரிசையில் தற்போது இளம் நடிகர் சூர்யாவும் இணைந்து விட்டார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
ஏழாம் அறிவு காட்சிகள்
எப்படி என்கிறீர்களா? ஏழாம் அறிவு திரைப்படம் உங்களில் பலருக்கும் ஞாபகம் இருக்கலாம். அதில் சீனா ஒரு வைரஸை தயாரித்து இந்தியாவில் பரப்புவதை போலவும், ஒரு கட்டத்தில் அதற்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பதற்காக, சீனா என்ன சொன்னாலும் அதை கேட்பதற்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தயாராகும் நிலை உருவாகும் என்றும் வசனம் இடம் பெற்றிருக்கும்.
சீனா மீது குற்றச்சாட்டு
இந்த வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு போதிதர்மன் மரபணு கொண்ட அரவிந்த் என்ற சூர்யா கதாபாத்திரம் தன்னை உருமாற்றி, உலகைக் காப்பாற்றும். இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்தியாவின் நோலன் என்று அழைக்கப்படக்கூடிய பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கி இருந்தார். தற்போது கொரோனா வைரஸ், சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கிளம்பி உள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக பொருளாதாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரக்கூடிய கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் இதற்கு பொருந்திப் போகிறது. எனவே, கடந்த பல மாதங்களாக, சமூக வலைத்தளங்களில் ஏழாம் அறிவு வீடியோக்கள் வைரலாக சுற்றி வருகின்றன.
காப்பான்
இதோ.. இப்போது வெட்டுக்கிளி பிரச்சனையும் சூர்யா திரைப்படத்தில் வந்த அதே காட்சியை போன்றே இருக்கிறது. கேவி ஆனந்த் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனம், பூச்சியை ஏவி விவசாய நிலங்களை அழித்து அந்த நிலங்களை கையகப்படுத்தி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த முயற்சியும் சூர்யா கதாபாத்திரத்தால் முறியடிக்கப்படும்.
வெட்டுக் கிளி படையெடுப்பு
இதோ, இப்போது வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு பல ஆயிரம் கிலோ உணவு தானியங்களை அது சிதறடிக்கிறது. மனிதர்கள் பஞ்சத்தில் சிக்கும் சூழ்நிலையை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து சூர்யா திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகள், நிஜவாழ்க்கையில் நடைபெற தொடங்கி இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் ரசிகர்கள்.
வேடங்களில் மட்டும் ஒற்றுமையில்லை
ஆரம்பத்தில் ஒரு காதல் நாயகனாக அறிமுகமாகி பிறகு பல்வேறு, வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது திறமையை நிரூபித்து காட்டியவர் சூர்யா. அந்த வகையில் விக்ரம் மற்றும் சூர்யா இருவருமே அடுத்த கமல்ஹாசன் என்று புகழப்பட்டவர்கள். இப்போது கமல்ஹாசன் திரைப்படங்களை போலவே சூர்யா திரைப்படங்களும் நாஸ்டர்டாமஸ் போல வருங்காலத்தைப் பற்றி பேசியிருப்பது, பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.