எதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
சென்னை: நடிகர் சூர்யாவை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் அவசியம் தமக்கு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த சனிக்கிழமை சாலி கிராமத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் 'அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?' என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார். சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் மணிமண்டபத்தில், தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம் மற்றும் செண்பகராமன் சிலைகளுக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், கடம்பூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, அஞ்சல்துறை தேர்வை ரத்து செய்தது, அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என்றும், தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என முதலில் கருத்து தெரிவித்தது அதிமுகதான் என்றும் கூறினார்.
நடிகர் சூர்யா மட்டும் இல்லை யாராக இருந்தாலும் கருத்து சொல்லலாம் என்றும், மாற்றுக் கருத்து சொல்ல தங்களுக்கும் உரிமை உண்டு என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். புதிய கல்வி கொள்கையை முழுமையாக படித்து விட்டு, கருத்து கூறினால் சரியாக இருக்கும். எதையும் அரைகுறையாக படித்து, சொல்ல கூடாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.