யூடியூப் சேனல்களில் ஒரே அவதூறு.. கொதித்த நடிகர் சரத்குமார்..சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபர புகார்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு வரும் யூடியூப் சேனல்களின் பெயர்களை குறிப்பிட்டு சரத்குமார் நடவடிக்கை எடுக்க கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். அதன்பிறகு அரசியலில் கவனம் செலுத்தினார். சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். தென்காசி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார்.
தற்போது சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் சரத்குமார் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அரசியல் மற்றும் நடிப்பை தாண்டி சமீபகாலமாக சரத்குமாரை சர்ச்சைகள் சூழ்ந்து வந்தன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..போட்டியில் இருந்து விலகிய சமக..யாருக்கும் ஆதரவு இல்லை..சரத்குமார் அதிரடி
ஆன்லைன் ரம்மியில் சரத்குமார் சர்ச்சை
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து பலபேர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்த நிலையில் விளம்பரத்தில் நடித்த சரத்குமாரை பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கு சரத்குமார் விளக்கமும் அளித்தார். ஆன்லைன் ரம்மிக்கு அரசு தடை விதித்து இருந்தால் நான் நடித்திருக்கவே மாட்டேன் என்று சரத்குமார் கூறினார்.
வாரிசு படத்தால் கிளம்பிய விவாதம்
அதேபோல் நடிகர் விஜய்யின் தந்தையாக பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இந்த படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசினார். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அவர் கூறியிருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. இவ்வாறாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் பேசும் பொருளாகி உள்ளார்.
சரத்குமார் புகார்
இந்நிலையில் தான் தற்போது நடிகர் சரத்குமார் சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவரை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் தொடர்ந்து இழிவுப்படுத்தி அவதூறான கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் யூடியூப் சேனல்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டள்ளது.
புகாருக்கான காரணம் என்ன?
அதாவது சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகாவின் உடல் நலம் பற்றி குடும்பத்தினர் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதோடு தன்னை பற்றியும் அவதூறான கருத்துகளை வீடியோக்களாக வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சைபர்க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.