லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர
சென்னை: நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெனிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23ம் தேதி சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 1,604 ஓட்டுக்கள் பதிவானது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.
ஓட்டுகள் எப்போது எண்ணப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.அடுத்த வழக்கு விசாரணை வருகிற 8-ந் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் ஓட்டு எண்ணும் தேதி மற்றும் ஓட்டுக்களை எண்ணும் இடத்தை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அடுத்த மாதமே நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள்.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி, நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைப்பதாக மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை தடைசெய்யும் படி கோரி, நடிகர் விஷால் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தீர்ப்பில் தலையிட முயன்றதாக, ஐசரி கணேஷ் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். முன்னதாக, நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ், அனந்தராமன் என்பவர் மூலம் தம்மை அணுகியதாக நீதிபதி தெரிவித்தார்.
தமது வழக்கில் தலையிட முயன்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து, இருவருக்கு எதிராகவும், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமனுக்கு, நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.