விஜய் மக்கள் இயக்கம் இல்லை கலைத்து விட்டோம் - நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் எஸ்ஏ சந்திரசேகர் பதில்
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இயக்குநராகவும் பின்னர் நடிகராகவும் வலம் வந்த எஸ் ஏ சந்திர சேகருக்கு தனது மகனை மிகப்பெரிய ஹீரோவாக்க நினைத்தார். பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றிக்கதாநாயகனாக உருவெடுத்தார் விஜய். அதற்கு முழு முதற்காரணம் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்தான்.
3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை காவல்துறை: ஆவடி, தாம்பரத்திற்கு இவர்கள் தான் சிறப்பு அதிகாரிகளா?
விஜய்க்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது வரை அனைத்திலும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகருக்கு முழு பங்கு உள்ளது. சினிமாவில் இருக்கும் மகனை அரசியலுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர், தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்து அதற்கு மாநில தலைவராக திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்கிற ஆர்கே ராஜாவை தலைவராக நியமித்தார்.
விஜய் கோபம்
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. எஸ்.ஏ சந்திரசேகர் எந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தாரோ, அன்று முதல் ஒரே குழப்பம்தான். தனக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று விஜய் கூறியிருந்தார். அப்பாவிற்கு விசுவாசமாக இருக்கும் கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்.
நடிகர் விஜய் வழக்கு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அமைப்பை பதிவு செய்தார். கட்சியைப் பதிவு செய்த நாள் முதலே சிக்கலும் குழப்பமும் நீடித்து வந்தது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஷோபா சந்திரசேகர்
நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், முத்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன், இன்பண்ட் யோகராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர். பத்மனாபன், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரன எஸ்.ஏ.சந்திரசேகர் , அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொருளாளர் ஷோபா சேகர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கே. ஜோஸ்பிரபு, மதுரை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முனிச்சாலை ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
பதில் தாக்கல் செய்ய உத்தரவு
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவ்ரும் ஆஜராகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதியன்று தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய தினம் எஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர் மன்றம்
அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.