25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்
சென்னை: கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் 25 லட்சம் ரூபாயை ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும்,அபராதமாக விதிக்கப்பட்ட ரூ 1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கான நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
ஒரே நாளில் 16 வீரர்களை சாய்த்த தொற்று.. ஒலிம்பிக்ஸை கதற விடும் கொரோனா.. பீதியில் டோக்கியோ..!
விஜய்க்கு ஒரு லட்சம்
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுவில் அபராதம்
அந்த மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வு, நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
நுழைவு வரி பாக்கி
மேலும் நுழைவு வரி பாக்கியை வசூலிக்க வணிக வரித்துறைக்கு செலான் பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் வழக்கு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது விஜய் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நிவாரணம்
அப்போது நீதிபதி, ஒரு லட்சம் ரூபாயை கொரானா நிவாரண நிதியாக தமிழக அரசிடம் ஏன் வழங்ககூடாது என கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் தரப்பில் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கடந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது. அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை கொரோனா நிவாரண தொகையாக வழங்க விருப்பமில்லை என்று விஜய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை தனி நீதிபதி தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.