சரியாக வரி செலுத்தி உள்ளார்.. எந்த தவறும் இல்லை.. விஜய் வீட்டு ரெய்டு.. வருமான வரித்துறை தகவல்!
நடிகர் விஜய் வீட்டில் பிப்ரவரியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் பிப்ரவரியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளார் என்று விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஏஜிஎஸ் குழுமம், பைனான்ஸ் செய்த அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து விஜய் வீட்டில் சோதனை நடந்தது.
அன்புச் செழியன் சரியாக வரி செலுத்தவில்லை, அவர் சில முறைகேடுகளை செய்துள்ளார் என்று புகார்கள் வந்தது. இதையடுத்து அவரிடம் செய்த வருமான வரித்துறை, பிகில் படத்திற்கும் அவர்தான் பைனான்ஸ் செய்தார் என்பதால் விஜய் வீட்டிலும் சோதனை செய்தனர்.
விஜய் வீட்டில் சோதனை
அப்போது நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யையும் அங்கிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு அழைத்து வந்து சோதனை செய்தனர். அவரது பனையூர் பண்ணை வீட்டில் இந்த சோதனை நடந்தது. இரண்டு நாட்கள் சோதனை நடந்தது. அதோடு சென்னை மற்றும் மதுரையில், மொத்தமாக 38 இடங்களில் சோதனை நடைபெற்றது. அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூ. 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் இல்லை
சென்னை, மதுரையில் உள்ள பல்வேறு மறைவிடங்கள், ரகசிய இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 300 கோடிக்கும் கூடுதலாக வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. விஜய் வீட்டில் இருந்து துரும்பை கூட வருமானவரித்துறை எடுத்து செல்லவில்லை.
மீண்டும்
இந்த நிலையில் நேற்று மீண்டும் நடிகர் விஜயின் பனையூர் இல்லத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். நேற்று மீண்டும் சோதனை நடந்ததாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் நேற்று நடந்தது சோதனை கிடையாது, அது சோதனையின் முடிவு. அதாவது அவர் வீட்டில் சீல் செய்யப்பட்டு இருந்த லாக்கர்களை வந்து அதிகாரிகள் திறந்து வைத்தனர். அதோடு விஜயிடம் சில கையெழுத்துக்களை பெற்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை நடக்கவில்லை
அதன்பின் அதிகாரிகள் கிளம்பி சென்றுவிட்டனர். அதே சமயம் நடிகர் விஜய் வீட்டில் பிப்ரவரியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளார். ‘பிகில்' மற்றும் ‘மாஸ்டர்' படங்களுக்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பத்திற்கு வருமான வரி சரியாக செலுத்தப்பட்டுள்ளது. பிகில் படத்துக்காக ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்துக்காக ரூ.80 கோடியும் நடிகர் விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். இதற்கு சரியாக வரி செலுத்தி உள்ளார், என்று வரித்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.