விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்பது ஒரு புறம்.. அடுத்த ரஜினி ஆகாமல் இருக்க இதெல்லாம் செய்யணும்!
சென்னை: நடிகர் விஜய்க்கு அரசியலுக்கும் வரும் ஆசை இருந்தால் சட்டுப்புட்டென்று வர வேண்டும். இவரும் ரஜினி மாதிரி மேடைப் பேச்சுடன் நின்றால் அடுத்த ரஜினி என்ற பெயர்தான் கிடைக்கும். எனவே இப்போது உள்ள சூழலில் மின்னல் வேகத்தில் இறங்கினால் தான் ரஜினியையும் மிஞ்சி விஜய்யால் வெல்ல முடியும்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் என்றால் ரஜினி. கமல் , விஜய், அஜித் என்று பட்டியல் நீளும். இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கமல் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் ரொம்ப நாளாக வருவார், வருவார் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த ரஜினி இன்னும் வரவில்லை. அடுத்த 6 மாதத்தில் கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லிக்கொள்கிறார்கள்.
அஜித் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக சொல்லிவிட்டார். எனக்கு ரசிகர்கள் மன்றமும் வேண்டாம், அரசியலும் வேண்டாம், நான் ஒரு நல்ல குடிமகனாக மட்டும் இருந்தால் போதும் என்று ஒதுங்கிவிட்டார். ஆனால் சினிமாவில் ரஜினியை போல் கமர்சியல் ஹீரோவாக உயர்ந்த விஜய், அவரை அரசியலிலும் பின்பற்றுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
அரசியல் ஆசை
ஏனெனில் நடிகர் விஜய் அரசியல் களம் காண ஆழம் பார்த்து வருவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகும். இதை விஜய்யும் இதுவரை மறுக்கவில்லை. அதேநேரம் விஜய் ஒவ்வொரு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் அரசியல் மேடையாக பயன்படுத்துகிறார்.
அரசியல் கருத்துக்கள்
விஜய்யின் சமீப கால படங்களில் நிச்சயம் அர்சியல் இருக்கும். கத்தி படம் தொடங்கி, மெர்சல், சர்கார் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த படங்களில் எல்லாம் அரசியல்வாதிகளை தாக்கி உள்ளதுடன், சமூக பொறுப்புடைய கருத்துக்களை தாங்கி விஜய் நடித்திருப்பார்.
பிகில் விழாவில் விஜய்
முக்கியமாக தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பொதுமக்களுக்கு நல்ல வேண்டும் என்ற கருத்து சொல்வதுடன், ஆளும் கட்சியின் தவறுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி வருகிறார். கடைசியாக பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் "பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மேல பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலேயும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகிறார்கள்" என்றும், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்" என்று பேசினார்.
மெர்சல் சர்கார்
இப்படி பேசியதால் ஆளும் அதிமுகவினர் நடிகர் விஜய் பேசும் ஒவ்வாரு பேச்சிலும் அரசியல் இருப்பதாக நினைத்து அவரை தாக்குகிறார்கள். பிகில் மட்டுமல்ல சர்கார் படத்தின் போதும், மெர்சல் படத்தின் போது இப்படித்தான் ஆளும் கட்சியை மறைமுகமாக தாக்கினார் விஜய்.
எஸ்ஏசி பேச்சு
இதனிடையே விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விஜய்க்கு இவ்வளவு எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். நீங்கள் பேசினால், இவ்வளவு எதிர்ப்பு வருமா, இல்லைதானே? விஜய் பேசினால் எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம் என்றார். அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அப்படி எதுவும் தெரியவில்லை என்றார்.
வளர்வது அரசியலிலா
நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை எஸ்ஏ சந்திரசேகரின் இந்த பதிலிலே புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஏற்கனவே தமிழ் சினிமாவின் வளர்ந்துவிட்ட ஒரு மிகப்பெரிய நடிகர் விஜய். அவரை வளர்ந்து வருவதாக எஸ்ஏசி கூறுகிறார். அப்படி என்றால் அவர் வளர்ந்து வருவது அரசியலிலா என்ற கேள்வி இயல்பாக எழும்
கைகொடுக்கும் ரசிகர்கள்
எனவே நடிகர் விஜய்க்கு அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் உடனே அதற்கான வேலைகளில் இறங்கி தீவிரமாக செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்தால் அரசியலில் சிறப்பாக வரலாம். ஏனெனில் அவருடைய வயது, மற்றும் ரசிகர்கள் பட்டாளம், துணிச்சலாக பேசும் குணம் இவை விஜய்க்கு கைகொடுக்கும்.
தைரியமாக போராட வரணும்
அரசியலில் வருவதாக உடனே அறிவித்து கட்சி ஆரம்பித்து, தவறுகளை சுட்டிக்காட்டி தைரியமாக மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களுடன் சென்று இறங்கி குரல் கொடுத்து போராட தொடங்கினால் மக்களின் கவனம் பெற்று மிகப்பெரிய அரசியல் தலைவராக விஜய் உயரலாம். அதேசமயம் தனது ரசிகர்களையும் விசலடிச்சான் குஞ்சுகளாக மட்டும் இருக்காமல் மக்களுடன் மக்களாக ஒன்று கலக்கத் தேவையான மெச்சூரிட்டி நடவடிக்கைகளையும் விஜய் செய்தாக வேண்டும்.
ரஜினியை மிஞ்சலாமா
ஆனால் ரஜினி மாதிரி ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் மேடைப் பேச்சுடன் நின்றால் அடுத்த ரஜினி என்ற பெயர் தான் கிடைக்கும். எனவே இப்போது உள்ள சூழலில் மின்னல் வேகத்தில் இறங்கினால்தான் ரஜினியையும் மிஞ்சி விஜய்யால் அரசியலில் வெல்லலாம். அதற்கு தேவை முயற்சியும் உழைப்பும் தான்.. எனவே அரசியலில் முழுமையாக இறங்க விஜய்க்கு இது சரியான தருணம் ஆகும்.