செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பிரபல நடிகர்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதிலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
இதனால் அடையாற்றின் கரையோர மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2015ஆம் ஆண்டு சென்னையை உருக்குலைத்த பெருவெள்ளம் போல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஒவ்வொரு நாளும் பொழுதை கழித்து வருகிறார்கள்.
சென்னைவாசிகளே அச்சம் வேண்டாம்...செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் கூறியிருக்கையில், வணக்கம் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர் பகுதியில் நான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.
நீர் மட்டம்
கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரை பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது. இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 21அடியை தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது.
பொருள் சேதம்
இந்த நிலை நீடித்தால் 2015-ஆம் ஆண்டைப் போல பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் உருவாகும்.ஆகவே தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கொரோனா
எனவே தயவு கூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். தங்களால் இதை செய்ய இயலும் என ஒரு மனதாக நம்புகிறேன். கொரோனா எனும் கொடு நோயிலிருந்து நம் தமிழக மக்களை கைவண்ணம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.