பார்த்தீங்களா.. முழுசா மாறி விஸ்வரூபம் எடுத்து நின்ற விஜய்யை பார்த்தீங்களா!
பிகில் பட ஆடியோ வெளியீட்டில் விஜய் பேசியது பெரும் உற்சாகத்தை தந்துள்ளது
Recommended Video
சென்னை: விஜய் டோட்டலாக மாறியுள்ளார்.. ரசிகர்கள் மிகப் பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.. இது அடுத்த அதிரடிக்கான முன்னோட்டமா என்பதுதான் ரசிகர்களின் மனதில் தடதடத்துக் கொண்டிருக்கும் கேள்வியாக உள்ளது.
இதுவரை இல்லாத விஜய்.. சினிமாவில் பார்த்த அதே பப்ளி விஜய்யை பிகில் பட ஆடியோ வெளியீட்டின் போது பார்த்து ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் விட்டனர். நம்ம தளபதியா இது என்பதுதான் அவர்களது ஆச்சரியம். காரணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக மிக ஜாலியாக விஜய் பேசியதுதான்.
வழக்கமாக விஜய் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தால் மணிரத்தினம் போலத்தான் கணக்காக பேசுவார். பெரிய அளவில் பேச்சு இருக்காது. வார்த்தைகளை மென்று மென்றுதான் பேசுவார். அதேபோல ஒரு கண்ணாடியைப் போட்டுக்கொண்டு படு நிதானமாக, அடக்கமாக பேசுவார்.
படுகியூட்
பிகில் பட விழாவில் இது டோட்டலாக மாறியிருந்தது. படு க்யூட்டாக காணப்பட்டார். தாடியுடன் கூடிய முகமாக இருந்தாலும் கூட அதில் அப்படி ஒரு பிரகாசம். படு பளிச்சென காணப்பட்டார். கருப்பு டிரஸ் அவருக்கு மேலும் அழகூட்டியது. பேச்சிலும் கூட புகுந்து விளையாடினார்.
தலைவா...
பாட்டுப் பாடியபடிதான் பேச்சையே ஆரம்பித்தார். அது யாரும் எதிர்பார்க்காதது. சும்மா மெக்கானிக்கலாகவும் பாடவில்லை. வளைந்து நெளிந்து பாடியதைப் பார்த்து ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. தலைவா என்ற குரல்கள் ஓயவில்லை. பாடி முடித்த பிறகு படு வேகமாக ஜாலியாக பேச்சைத் தொடங்கினார் விஜய்
யோகி பாபு
வழக்கம் போல பேசாமல் ஒவ்வொருவரையும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார். யோகி பாபுவைப் புகழ்ந்து பேசிய அவர் அவரை ரொம்பவே கலாய்த்து வெட்கப்பட வைத்து விட்டார். வீடு யார் வேண்டும்னாலும் கட்டலாம் நண்பா.. ஆனால் தாலி என்று கூறி நிறுத்தி யோகி பாபுவை வெடிச் சிரிப்புக்குக் கொண்டு போனார். கூட்டமோ நம்ம அண்ணாவா இது என்று வாய் பிளந்து சிலிர்த்து குதூகலித்தது.
அனல்
அத்தோடு விட்டாரா அட்லியையும் விடவில்லை. பாட்டுப் பாடியபோது கருப்பா களையா இருப்போம் என்ற வரி வந்தபோது அவரை நோக்கி கையைக் காட்டி அட்லியை சிரிக்க வைத்தார். பேச்சின்போது அட்லியோ இட்லியோ அனல் பறக்கும் என்று கூறி மிரட்டினார். எதுகை மோனையுடன் பேசிய விஜய்யின் அந்தப் பேச்சும் ரசிகர்களை லயிக்க வைத்தது.
கலக்கம்
இப்படியே லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். அத்தனை பேசினார் விஜய். இதில் விசேஷம் என்னவென்றால் இதற்கு முன்பு அவர் இப்படிப் பேசியதில்லை என்பதே. இந்த டோட்டல் மாற்றம்தான் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக கட்சியினரை கலங்க வைத்துள்ளது. விஜய் இப்படி டோட்டலாக மாறியிருப்பதன் மூலம் பல முக்கிய விஷயங்களை வெளியுலகுக்கு உணர்த்தியுள்ளார்.
அதிரடிகள்
மேடைப் பேச்சின் மூலம் தனக்கு முன்பு கூடியுள்ள கூட்டத்தை வசீகரிக்கும் திறமையை விஜய் கையில் எடுத்து உள்ளார். இது அவர் அடுத்தடுத்து ஏதாவது அதிரடிகளைச் செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தன் மீதான சில முத்திரைகளை உடைக்கும் வகையிலும், தனது எதிரிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விஜய்யின் சில பேச்சுக்கள் வெளிப்படுத்துவதாக இருந்தன.
அரசியல்
இதுபோல ஒவ்வொரு தரப்புக்கும் சில செய்திகளை விஜய் விட்டுச் சென்றுள்ளார் தனது பேச்சின் மூலம். விரைவில் அவரது விஸ்வரூபம் இருக்கலாம்.. குறிப்பாக பிகில் படத்திற்குப் பிறகு அவர் அதிரடிகளில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. பிகில் படத்தில் பேசியதுபோலவே அதிரடியாக, ஜாலியாக, மக்களைக் கவரும் வகையில் தொடர்ந்து விஜய் பேசினால் நிச்சயம் அவர் பக்கம் மிகப் பெரிய கூட்டம் கூடும்.
ரஜினி
அதேநேரம், விஜய் தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியீட்டின்போதும், சம்பந்தப்பட்ட படத்தை பற்றி பேசாமல், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதும், ஆளும் தரப்பை விமர்சிப்பதும், வியாபார யுக்தியாக பார்க்கப்பட்டுவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. வெறும் பரபரப்புக்கும், படம் ஓட்டுவதற்கும் மட்டுமே விஜய் பேச்சு அமைந்துவிடக்கூடாது என்பதும், இது இப்படியே தொடர்ந்தால், ரஜினி போலவே அரசியல் வியாபாரியாக விஜய்யும் உற்றுநோக்கப்பட்டு விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.