ஒன்று விலகணும்.. இல்லை தொடரணும்.. அது என்ன நன்றி வணக்கம்.. குழப்பும் விஜய் சேதுபதி!
சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது தொடர்பாக அல்லது விலகுவது குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லாமலேயே தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் முரளிதரன் அறிக்கையை ஷேர் செய்து நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது கோரிக்கை. ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்; இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பவர் என்பதால் முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்தது.
800 திரைப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை
முரளியின் முதல் அறிக்கை
இதனை அடுத்து முத்தையா முரளிதரன் முதலில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழனாக நான் பிறந்தது என் தவறா? ஈழத் தமிழருக்கு நான் இப்போதும் உதவி வருகிறேன் என கூறியிருந்தார். ஆனாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் முத்தையா முரளிதரனுக்கு கடும் எதிர்ப்பு நீடித்தது.
முரளி மீண்டும் அறிக்கை
இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் ஒரு வேண்டுகோள் விடுத்து இன்று மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் எனவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.
விஜய் சேதுபதிக்கு முரளி வேண்டுகோள்
மேலும், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை என்றும் முரளி கூறியிருந்தார்.
விஜய்சேதுபதி விலகினாரா? இல்லையா?
முத்தையா முரளிதரனின் இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டரில் ஷேர் செய்து நன்றி வணக்கம் என்று மட்டும் சூசகமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. ஆனால் விலகுகிறேன் என்றோ அல்லது படத்தில் தொடருவேன் என்றோ எதுவும் விஜய் சேதுபதி கூறவில்லை. விஜய்சேதுபதிதான் இதுபற்றி தெளிவாக விளக்க வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் விளக்காமல் நன்றி வணக்கம் என மட்டும் சொன்னால் மிச்சத்தை யார் சொல்வார்களாம்? விஜயசேதுபதிக்கே வெளிச்சம்!