விஷால் தத்தெடுத்துள்ள கிராமம் எது தெரியுமா?
புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்க போவதாக விஷால் அறிவித்துள்ளார்.
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வீடு இழந்து, தோட்டங்கள், நிலங்களை இழந்து, எதிர்காலமே என்னவென்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து பல தரப்பிலிருந்து செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஏராளமானோர் உதவிகளை செய்து வருகிறார்கள்.
திரையுலகினர் உதவி
தொழிலதிபர்களும், திரைப்பிரபலங்களும் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பையும் தந்து வருகிறார்கள். விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பலரும் நிதி அளித்துள்ளார்கள்.
சமுத்திரகனி, சத்யராஜ்
இதைதவிர இயக்குனர்கள் குழு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிதி அளித்து ஆறுதலும் சொல்லிவிட்டு வந்தது. சமுத்திரகனி, நடிகர் சத்யராஜ் போன்றோர் வெளிஉலகுக்கே தெரியாமல் தங்களது உதவிகளை செய்து வருகின்றனர்.
விஷால் பேட்டி
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் விஷால் பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுக்கப் போவதாக கூறிய விஷால், தத்தெடுக்க உள்ள அந்த கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என்றும் அறிவித்திருந்தார்.
முன்மாதிரி கிராமம்
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கார்க்வயல் என்ற கிராமத்தைதான் தத்தெடுத்துள்ளார் விஷால். "இந்த கிராமத்தை தற்காலிகமாக இல்லாமல், மறு சீரமைப்பினை முழுமையாக செய்வேன். இதனை இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன்" என்று அந்த கிராம மக்களுக்கு விஷால் உறுதி அளித்தார்.
மக்கள் மகிழ்ச்சி
இதனை கேட்ட கார்காவயல் கிராம மக்கள், "நிச்சயம், உங்களுக்கு நாங்கள் எப்பவுமே ஆதரவாக இருப்போம்" என்று நம்பிக்கை கூறினார்கள். விஷால் தங்களுடைய கிராமத்தை தத்தெடுக்கப் போவதால், அந்த கிராம பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.