அம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்!
Recommended Video
சென்னை: அம்மா இறந்து ஒருநாள்தான்.. அதுக்குள்ள விவேக் மரம் வளர்ப்போம் என்ற கோஷத்தை இன்று எழுப்ப ஆரம்பித்துவிட்டார்.
விவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நடுமாறு மறைந்த அப்துல் கலாம் சொல்லி இருந்தார். இதையடுத்து, கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் நடிகர் விவேக்.
இது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையனும் மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை விவேக் உடனடியாக வரவேற்று ட்வீட் போட்டார். அது மட்டுமில்லை.. மரம் நடுதலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே என்று கோரிக்கை வைத்து வருபவரும் விவேக்தான்!
மரணம்
இந்நிலையில், 2 நாளைக்கு முன்னாடி விவேக்கின் 86 வயதான அம்மா மணியம்மாள் மாரடைப்பால் காலமானார். நடுவில் ஒரே நாள்தான்.. துக்க வீட்டில் ஆயிரத்தெட்டு வேலைகள் இருந்தாலும், அம்மாவின் நினைப்புகள் மனசில் தேங்கி வழிந்தாலும், அதையும் தாண்டி தனது வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார் விவேக்.
பள்ளிக்குழந்தைகள்
அம்மாவின் இறுதி சடங்கு முடித்த கையோடு,ஒரு பள்ளிக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது ஒரு அரசு பள்ளிக்கூடம். பெருங்கோட்டூரில் உள்ளது. விவேக் வீட்டுக்கு பக்கத்தில்தான் இந்த ஸ்கூல் உள்ளது. விவேக்கை பார்த்ததும் பள்ளிக்குழந்தைகள் அவரை சுற்றிக் கொண்டனர். அவர்களுடன் பேசிய பிறகு, ஒரு உறுதிமொழியையும் சொல்லி கொடுத்தார்.
ஜெய்ஹிந்த்
"மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. எங்கள் ஊர் பெருங்கோட்டூர் பெருமை சேர்ப்போம். எங்கள் அம்மா,அப்பா,உறவினர்கள் அனைவருக்கும் மரியாதை செய்வோம். அவர்கள் சொல்வதை நன்கு கேட்டு பெரிய ஆளா வருவோம். எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு தெய்வங்கள். ஆகவே அவர்கள் சொல்வதை கேட்டு, சிறந்த மாணவனாக, மாணவியாக உருவாகுவோம்.. ஜெய்ஹிந்த்" என்றார்.
கொள்கை
விவேக் இதனை சொல்ல, சொல்ல மாணவர்களும் திருப்பி சொல்லி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மகன், அப்பா, அம்மா என அடுத்தடுத்த உறவுகளை விவேக் இழந்து வந்தாலும்.. தன்னுடைய கொள்கையை எந்த சூழலிலும் விட்டுத்தராமல் பயணித்து வருகிறார். இது விவேக்குக்கு மட்டுமே சாத்தியம்!