Mothers day: குடும்பத்தின் கஷ்டத்தை சொல்லி வளர்த்தார்... அம்மாவை பற்றி மனம் திறக்கும் ஸ்ரீபிரியா
சென்னை: சிறுவயது முதலே குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களை தனது அம்மா சொல்லி சொல்லி வளர்த்ததாகவும், இதனால் இன்றும் எளிமையான வாழ்க்கை முறையையே தாம் பின்பற்றுவதாகவும் கூறுகிறார் நடிகை ஸ்ரீபிரியா.
நாளை உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தாய்மையின் நேசத்தையும், பாசத்தையும் சிறப்பிக்கும் வகையில் அது தொடர்பான சிறப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறது ஒன் இந்தியா தமிழ்.
அந்த வகையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான ஸ்ரீபிரியாவிடம் அவரது தாயார் குறித்த நினைவுகளையும், பெருமைகளையும் பற்றி கேட்டோம்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;
Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!
மிடில் கிளாஸ்
''எனது அம்மாவை நான் அக்கா எல்லோரும் அழகி என்று தான் அழைப்போம். ஏனென்றால் அவர் எங்களை விட அழகாக இருப்பார். அம்மா பரதநாட்டிய கலைஞர். மிடில் கிளாஸ் குடும்பமாக இருந்தாலும் என்னை சர்ச் பார்க் கான்வெண்டில் சேர்த்து படிக்க வைத்தார். நமது தகுதிக்கு மீறிய இடத்தில் உன்னை படிக்க வைக்கிறேன், அதனால் எக்ஸ்ட்ரா கோ கர்ரிகுலர் ஆக்டிவிடீஸில் பங்கெடுக்க வேண்டாம் என்பார். ஏனென்றால் அதற்கு உரிய தொகையை செலுத்த வசதியில்லை.
ஆசைப்படக் கூடாது
ஒரு சிலர் தங்களிடம் பணம் இல்லை என்றாலும் கூட அக்கம்பக்கத்து குழந்தைகள் அந்த பள்ளியில் படிக்கிறது நாமும் அங்கு சேர்ப்போம், அந்த உடை உடுத்துகிறது நாமும் வாங்கிக்கொடுப்போம் என செய்வார்கள். ஆனால் எனது அம்மாவை பொறுத்தவரை அந்த பேச்சுக்கே இடமில்லை. என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் அனுசரித்துக்கொள்ள வேண்டும் என்பார் . நமது தகுதிக்கு மீறி எதற்கும் ஆசைப்படக்கூடாது என கூறுவார் அம்மா. இப்போது எனது பசங்க ஏதாவது வாங்க வேண்டும் பணம் கொடுங்க எனக் கேட்டால், ஒரு இரண்டு முறை கேட்டாலே நான் கொடுத்துவிடுவேன். ஆனால் எங்க அம்மா இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிடுவார்.
எளிமையான வாழ்க்கை
ஆடம்பர வாழ்க்கை கூடாது என பள்ளி பருவத்தில் இருந்தே எங்களுக்கு போதித்துள்ளார். இதனால் இன்றும் சென்னையில் நான் எங்கேயாவது வெளியே செல்ல வேண்டும் என்றால் காரில் தான் செல்ல வேண்டும் என நினைக்கமாட்டேன். ஆட்டோவில் சென்றுவிடுவேன். இந்த அணுகுமுறையெல்லாம் எனது அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தது. இந்த நேரத்தில் உங்களிடம் நான் எனது அக்காவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அக்கா மீனாட்சி மறைந்துவிட்டார், ஆனால் அவர் என்னை இன்னொரு தாய் போல் அப்படி பார்த்துக்கொண்டார்.
பக்கபலம்
துணைக்கு வருவார் படப்பிடிப்பு தளங்களில் எனது அம்மா எனக்கு துணையாக இருப்பார். ஏதாவது ஒரு வகையில் இன்றும் எனது அம்மா எனக்கு உதவி செய்துகொண்டே தான் இருக்கிறார். எனது மகள் எல்.கே.ஜி.யில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை நானோ எனது கணவரோ தான் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவோம், மீண்டும் பள்ளியில் இருந்து அழைத்து வருவோம். பல நாட்கள் பணி நிமித்தமாக நாங்கள் செல்ல முடியாத சூழலில் எனது அம்மா தள்ளாத வயதிலும் தானே பள்ளிக்கு சென்று எனது மகளை அழைத்து வருவார்.
அம்மாவிடம் பேசுவேன்
எனது அம்மாவுக்கு இப்போது 84 வயதாகிறது. தம்பி வீட்டில் வசித்து வருகிறார். தினமும் அவருடன் வீடியோ காலில் பேசாமல் இருக்கமாட்டேன். இன்றும் அவருக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் நாங்கள் செய்ய மாட்டோம். அம்மாவின் மனதை நோகடித்து யார் எது செய்தாலும் அது சரியாக இருக்காது என்பது எனது கருத்து. அம்மா கண்டிப்பானவர் ஆனால் அதேநேரம் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கவும் செய்வார்.
ஊக்குவிப்பார்
நான் கேவலமாக சமைத்தால் கூட அதை நல்லா இருக்கு என நேர்மறையாக பாராட்டுவார், ஏன் சும்மா இருக்கிறாய் தொடர்ந்து செயல்படு ஒரே இடத்தில் முடங்கக்கூடாது என இன்றும் எனக்கு உற்சாகம் தருகிறார் அம்மா. இந்நிலையில் அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஒன் இந்தியா தமிழ் மூலம் எனது வாழ்த்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.