ஏப்.14 முதல் அண்ணாமலைக்கு எதிராக சென்னை-கன்னியாகுமரி சக்தி யாத்திரை: காயத்ரி ரகுராம் பரபர ட்வீட்!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் 14-ந் தேதியன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சக்தி யாத்திரை தொடங்கப் போவதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கோஷ்டியை சேர்ந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவின் உள் விவகாரங்களை முன்வைத்து சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார் நடிகை காயத்ரி. இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தம்மை பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதை வரவேற்று நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டிருந்த அறிக்கை பெரும் சர்ச்சையானது. அந்த அறிக்கையில், என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து நீதி கேட்டு சக்தி யாத்திரை தொடங்கப் போவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்திருந்தார். தற்போது இந்த யாத்திரையை ஏப்ரல் 14-ந் தேதிக்கு மாற்றி இருக்கிறார். இது தொடர்பாக காயத்ரி வெளியிட்டுள்ள பதிவில், ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14-ந் தேதிக்கு மாற்றப்படுகிறது. இந்த தேதி மாற்றத்துக்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு Z பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் நான் பயப்படமாட்டேன். அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும் என கூறியுள்ளார். ஏப்ரல் 14-ந் தேதி திருச்செந்தூரில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசகம்