ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
சென்னை: ஒருத்தரை நம்பி அரசியலுக்கு வருவது குறித்து திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதெல்லாம் வீணாக போச்சு என கஸ்தூரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து நடிகை கஸ்தூரி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள், ஏப்ரல் 1 ஆம் தேதி தேர்தல் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
அன்று உலக முட்டாள்கள் தினம். அதனால்தான் ஜாக்கிரதையாக ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அறிவித்துள்ளார்கள். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவது என்பது எனது யோசனையில் இருந்தது.
திட்டம் வீணாகி போச்சு
ஒருத்தரை நம்பி போட்ட திட்டங்கள் எல்லாம் வீணாகி போச்சு. இதனால் இப்போதைக்கு அரசியலில் சேருவதற்கு இன்னும் ஒரு மாதம்தான் நேரம் இருக்கிறது. அதற்குள் முடிவு எடுத்தாக வேண்டும். கூடிய விரைவில் என்னுடைய அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அரசியலில் நாம் கவனம் செலுத்தினால் அதில் நாம் முழு ஈடுபாட்டையும் செலுத்த வேண்டும்.
சாதாரண பணி கிடையாது
மக்களுக்காக உழைக்கிறது என்பது சாதாரண பணி அல்ல. ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் டிவி சீரியலில் நடித்துக் கொண்டு அதே நேரத்தில் அரசியலுக்கு செய்கிறேன் என்ற அளவுக்கு நான் ஆக்டோபஸ் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு இரு பெற்ற குழந்தைகளும் 50 வளர்ப்பு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
ஈடுபாடு
அவர்களுடைய அன்றாட தேவைகளை கவனிப்பதிலேயே எனக்கு சரியாக போகிறது. இதைத்தாண்டி பெண்களுக்கான உரிமைகளை பேச வேண்டும். குழந்தைகளுக்கான பெண்களுக்கான சராசரி மனிதருக்கான நேர்மையான அரசியலை பேச வேண்டும் என்ற கோபத்தில்தான் நான் அரசியல் பேச தொடங்கினேன். விமர்சனங்களையும் முன் வைத்தேன். தேர்தலில் நிற்கணும் எம்எல்ஏவாகணும், தமிழகத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் எனக்கு இல்லை.
குரல் கொடுக்க விருப்பம்
உண்மையானதற்கு குரல் கொடுக்க விரும்புகிறேன். அதற்காக இந்த தேர்தல் நேரத்தில்தான் வர வேண்டும் என்பதில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் நான் வருவேன். சமூக வலைதளங்கள் எல்லாம் பொருளாதாரத்தில் மேல் இருப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயம். ஸ்மார்ட் போன் இருக்கணும், படித்தவர்களாக இருக்க வேண்டும். என்னை பொருத்தமட்டில் உச்ச நடிகர்களுக்கு மத்தியில் சண்டை மூட்டி அவர்களுடைய ரசிகர்கள் அடித்துக் கொள்வதற்கும், யாராவது பிடிக்காதவர்களை அசிங்கமாக திட்டுவதற்கும்தான் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.
பெரிய விமர்சனங்கள்
இவர்களை தாண்டி அரசியல் தொடர்பாக பெரிய பெரிய விமர்சனங்களை முன் வைக்கும் படித்தவர்கள் வாக்களிக்கும் இடத்திற்கே வருவதில்லை. சோஷியல் மீடியா, எக்ஸிட் போல் உள்ளிட்டவை வருங்காலத்தில்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதைக்கு திருமங்கலம் பார்முலாதான். யார் வாய்ஸ் கொடுத்தாலும் தற்போது எடுபடுவதில்லை. காந்தி என்பவர் கொடுக்கும் வாய்ஸ்தான் இப்போது எடுபடுகிறது.
உரிமைகள்
அரசியலுக்கு வருமாறு பல்வேறு கட்சிகளிலிருந்து என்னை அழைக்கிறார்கள். ஆனால் அதை நான் நிராகரித்து வருகிறேன். ஜெயலலிதாவுடன் இறுதி வரை கூடவே இருந்த சசிகலாவுக்கு சில உரிமைகளை கொடுத்திருந்தால் அது செய்தியாக மாறியிருக்கவே இருந்திருக்காது. இது மிகப் பெரிய பரபரப்பா மாறியதே அவர்களை தடை செய்ததால்தான். அவருக்கு பயந்து கொண்டு எல்லாத்தையும் மூடிவிட்டு போவது போல் இருந்தது. இது ஆளும் கட்சிக்கு அழகல்ல என நான் கருதுகிறேன்.
ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் குறித்து கேட்கிறீர்கள். எடப்பாடி இருப்பவர், ஸ்டாலின் வரத் துடிப்பவர். திடீர்னு தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதினு சொல்லிட்டதால இதுவரை தொகுதி பக்கமே போகாத எம்எல்ஏக்களுக்கு ஆப்புதான். பிரச்சாரத்திற்கு கூட நேரமில்லை. வாக்காளர் அடையாள அட்டை சரி பார்த்தவர்களுக்கு இறுதி பட்டியல் வரவில்லை. கொரோனா பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அவசரமாக தேர்தலை அறிவித்தார்களா என தெரியவில்லை. ஒரு வேளை அடுத்த கொரோனா பாதிப்பு என்னவாக இருக்கும் என முன்கூட்டியே தெரிந்து கொண்டு நம்மிடம் சொல்லாமல் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்களோ என்னவோ தெரியவில்லை . தேர்தலை முடித்துவிட்டு ஏதாவது குண்டு போடுவார்களோ யார் கண்டார்? என்றார் கஸ்தூரி.