சம்பளம் கட்.. வேலையும் போயிடும்.. அது என்ன தற்காலிக வாபஸ்.. கஸ்தூரி மீண்டும் வம்பு
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "சம்பளம் கட் ஆவுது, வேலையும் போயிடும் போல இருக்கு... அது என்ன தற்காலிக வாபஸ்" என்று ஆசிரியர்களை திரும்பவும் வம்பிக்கிழுத்து நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.
பொதுவாக நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து கொண்டு, அது சம்பந்தமாக அடிக்கடி கருத்தை பதிவிட்டு வருபவர் நடிகை கஸ்தூரி. இது சில சமயம், நியாயமான கருத்தை பதிவிட்டு நெட்டிசன்களிடம் சபாஷ் வாங்கி கொள்வார். சில சமயம் அறிவுஜீவிதனம் என்ற பெயரில் உளறி கொட்ட போய் இவரை அதே நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுவார்கள்.
சினிமாகாரர்கள், அரசியல்வாதிகளை மட்டுமே வம்பிழுத்து ட்வீட் போட்டு வந்த கஸ்தூரி ஆசிரியர்களையும் விட்டு வைக்கவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்த ஆசிரியர்கள் குறித்து மறுநாளே இவர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
ஒன்னாம் கிளாஸ் வாத்தியார்
அதில் "ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park இல் வேலை செய்யும் BE யை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? கூசாம போராட்டம் மட்டும் பண்ண தோணுது" என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அதில் தெரிவித்திருந்தார். கஸ்தூரியின் அந்த ட்வீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்தது.
தற்காலிக வாபஸ்
இந்நிலையில் போராடி வரும் ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டும் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் பள்ளிக்கல்வித்துறை ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ததுடன், மேலும் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று தங்களது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
|
EPS அரசுக்கு பெயர்
இந்த வாபஸ் குறித்து கஸ்தூரி மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். அதில் "ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ். மிரட்டலுக்கு பணியாத அரசு என்று EPS அரசுக்கு இன்று பெயர் கிடைத்ததற்கு காரணம், ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை. இது மக்களின் வெற்றி. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு பாடம்"
|
எதிர்ப்பும், வரவேற்பும்
"அது என்ன தற்காலிக வாபஸ்? "சம்பளம் கட் ஆவுது, வேலையும் போயிடும் போல இருக்கு... இப்போ வேணாம். விடுமுறை நாட்களிலே தேர்தல் வரும், அப்போ தேர்தல் பணிக்கு கூப்பிடும்போது நம்ம யாருன்னு காட்டுவோம் பாரு" என்று கறுவினார் நண்பர்" என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கும் வரவேற்பும், எதிர்ப்பும் சரிசமமாக எழுந்து வருகிறது. சமீபத்தில் கஸ்தூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்ததும், அது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலானதும் நினைவிருக்கலாம்.