என்னை வம்பிழுக்கிறார்கள்.. எனக்கும் திருமா.வுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. கஸ்தூரி புகார்
விசிகவினர் அளித்துள்ள புகார் குறித்து கஸ்தூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "நான் பட்டியலினத்துக்கு எதிரானவள் போல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.. எனக்கும் திருமாவளவனுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. என்னை வம்பிழுக்கிறார்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லைன்னா.. என் கருத்து குற்றமாகிவிடாது.. என்று விசிகவினர் அளித்துள்ள புகாருக்கு நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"சனாதன கல்வியை வேரறுப்போம்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, "கூம்பு வடிவில் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்" என்று தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சு இந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாகவும் சொல்லி, தங்கள் அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
வருத்தம்
இந்து கோயில்கள் குறித்து பேசியதற்கு ஏற்கனவே திருமாவளவன் வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டிருந்தாலும், பலர் தங்கள் எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.. மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை கொடுத்தபடியே உள்ளனர்.
புனிதத்தலம்
அந்த வகையில், நடிகை கஸ்தூரியும் புனிதத்தலங்கள் அவமதிப்பு தொடர்பாகத் தனது கருத்தையும் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கஸ்தூரி மீது பெரம்பலூர் போலீசிலும் புகார் அளித்துள்ளனர். இதனை கண்டித்து கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
பொய் புகார்
"விடுதலை சிறுத்தை கட்சியிலும் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். வி.சி. கட்சியை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும் பொய் பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். போலீசில் பொய் புகாரும் அளித்துள்ளனர். திருமாவளவனுக்கும் எனக்கும் விரிசலை ஏற்படுத்தவும் பட்டியலினத்தவருக்கு நான் எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.
விமர்சனம்
கடந்த வாரம் முகநூலில் புனிதத்தலங்களை அவமதிக்கும் விஷமிகளை விமர்சித்து பதிவிட்டிருந்தேன். அப்பதிவில் எந்த தனி நபரையோ சமூகத்தையோ நான் குறிப்பிடவில்லை. ஆனால் திருமாவளவன் மற்றும் அவர் சமூகத்தை சார்ந்தவர்களை பற்றி நான் பதிவிட்டதாக கூறி என்னை வம்பிழுக்கின்றனர்.
அணுகும் செயல்
எந்த தனி நபரையோ ஜாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை என்ற போது என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பது அச்சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயலாக உள்ளது. இப்படி ஆதாரமற்ற பொய் வழக்கு போட்டால் அதற்கான பின்விளைவுகளை அந்த வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
திருமாவளவன்
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என் கருத்து குற்றம் ஆகிவிடாது. இதுபோன்ற அவதூறு நடவடிக்கைகள் திருமாவளவனுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றே நம்புகிறேன். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சி தலைமை கண்டிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.