எடுத்த நல்ல பேரை "தண்ணி"யில கரைத்து விடுவாரா முதல்வர்.. இன்னைக்கு தெரிஞ்சிடும்.. கஸ்தூரி ட்வீட்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கஸ்தூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: "2 மாசமா எடுத்த நல்ல பெயரையெல்லாம் முதல்வர் இப்பொழுது தக்க வைத்து கொள்வாரா, இல்லை 'தண்ணியில்' கரைத்துவிடுவாரா என்று இதோ இன்று தெரிந்துவிடும்... அந்த வகையில், இந்த பிறந்தநாள் எடப்பாடியாரின் மறக்க முடியாத முக்கிய நாள்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் குறித்து கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
சென்ற வருடம் சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்தார்.
இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாயின. அதிமுகவில் இணைந்துவிட்டார் என்கிற செய்தியும் பரபரப்பாக பரவியதும், அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த கஸ்தூரி, "நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டும், அதிமுகவிற்கு இல்லை" என விளக்கினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 66-வது பிறந்த நாள் - பிரதமர் மோடி வாழ்த்து
பாராட்டு
மேலும் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போதும், லாக்டவுன் சமயத்தில், வெளிமாநில தொழிலாளர்களின் நலனில் தமிழக அரசு எடுத்து வரும் அக்கறையும், முயற்சியும் பாராட்டுக்குரியது, வேறு எந்த மாநிலத்தையும்விட நம் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கஸ்தூரி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.
பதிவு
அந்த ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: "எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கேட்டதும் எனக்கு தோன்றுவது- எளிமை. மிக மரியாதையாக, தோழமையுடன் பேசுவார். பொது வாழ்க்கையும் பதவியும் அவரின் அந்த அடிப்படை பண்பை மாற்றவில்லை.EPS அவர்கள் தமிழகத்தின் முதல்வராக தலைமையேற்ற பொழுது, இரண்டு வாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டார் என்று பலர் பந்தயம் கட்ட தயாராக இருந்தார்கள்.
சிக்கல்
அத்தனை சிக்கல்களை சமாளித்து, பல சோதனைகளை கடந்து, இரண்டு வருட ஆட்சியில் எதிர்க்கட்சியினர் கூட 'அட, பரவாயில்லையே!' என்று வியக்குமளவுக்கு நல்ல பெயரை வாங்குவது சுலபமல்ல. எல்லாவற்றையும் விட பெரிய சோதனை இப்போது. இந்த கொரோனா காலம் எடப்பாடியாரின் தலைமைக்கு ஒரு அக்னி பரீட்சை. இரண்டு மாதமாக எடுத்த நல்ல பெயரையெல்லாம் இப்பொழுது தக்க வைத்து கொள்வாரா, இல்லை 'தண்ணியில்' கரைத்துவிடுவாரா என்று இதோ இன்று தெரிந்துவிடும்.
தண்ணி
அந்த வகையில், இந்த பிறந்தநாள் எடப்பாடியாரின் மறக்க முடியாத முக்கிய நாள். அவருக்கும் தமிழக மக்களுக்கும் நல்ல நாளாக அமையட்டும்!" என்று பதிவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளை திறக்க விரும்பாத கஸ்தூரி "தண்ணி" என்ற வார்த்தையை குறிப்பிட்டு தனது அதிருப்தியுடன் கலந்து இந்த பதிவினை போட்டுள்ளார்.