Exclusive: ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவேன்... போன் பே மூலம் பண உதவி செய்கிறேன் -நடிகை லதா ஓபன் டாக்
சென்னை: கொரோனா கால லாக்டவுனில் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதாகவும், தியானம் செய்வதாகவும் கூறுகிறார் நடிகை லதா.
லாக்டவுன் காலத்தில் நடிகை லதா தனது நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார் என்பதை அறிவதற்காக அவரிடம் பேசிய போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
போட் கிளப் தெருக்களை தாரைவார்க்க முடியாது... கோடீஸ்வரர்கள் கோரிக்கையை நிராகரித்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ்
அவர் கூறியதன் விவரம் பின்வருமாறு;
உடற்பயிற்சி
''கொரோனாவுக்கு முன்பு எனக்கு உட்கார நேரம் இருக்காது. சீரியல் ஷூட்டிங், கட்டுமானப் பணிகள், என பல வேலைகளுக்காக ஓடிக்கொண்டே இருப்பேன். திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. பிறகு போக போக பழகிக்கொண்டேன். தினமும் 45 நிமிடங்கள் தியானம் செய்து வருகிறேன். இது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அதேபோல் வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் உள்ளதால் உடற்பயிற்சியும் செய்து வருகிறேன்.''
தொழில்நுட்பம்
''எனது வீட்டிற்கு வெளியில் இருந்து வரும் பணியாட்களை வர வேண்டாம் எனக் கூறிவிட்டேன். ஆனாலும் அவர்களுக்கு மாத ஊதியம் அளித்து வருகிறேன். அதேபோல் நிறையப்பேர் நிதி உதவி கேட்டார்கள், அவர்களுக்கு போன் பே மூலம் பணப்பரிமாற்றம் செய்தேன். என்னை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக புதிய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். ஒவ்வொருவரும் காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை நாமே அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.''
சூப்பர் மார்க்கெட்
''ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவேன், தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்ப்பேன். மேலும், எனது மகன்கள் இரண்டு பேரிடமும் வீடியோ கால் பேசுவேன். ஒரு மகன் மலேசியாவில் இருக்கிறார் மற்றொரு மகன் லண்டனில் இருக்கிறார். அதேபோல் எவ்வளவு நேரம் வீட்டிலேயே அடைந்துகிடக்க முடியும் சொல்லுங்கள், அதனால் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்துகொண்டு இப்போதெல்லாம் நானே சூப்பர் மார்க்கெட் சென்று பொருட்களை வாங்கி வருகிறேன். இதில் விசேஷம் என்னவென்றால், முகக்கவசம் போட்டு முகத்தை மூடியிருந்தால் கூட என்னை சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் மக்கள்''.
இரண்டு சீரியல்கள்
''இரண்டு பெரிய சேனல்களில் ஒளிபரப்பாக கூடிய முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறேன். தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளதால் என்னை ஷூட்டிங் அழைத்தார்கள். கொரோனா பதற்றம் முடியும் வரை தயவு செய்து என்னை அழைக்காதீர்கள் என்று சீரியல் குழுவினரிடம் தெரிவித்துவிட்டேன். இப்போது உள்ள சூழலை பார்த்தால் கொரோனாவுடன் நான் வாழ பழகிக்கொண்டேன் என்று கூட சொல்லலாம்''.
கொரோனா நிவாரணம்
கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வர வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக நானும் எனது தம்பி ராஜ்குமாரும் (நடிகை ஸ்ரீபிரியா கணவர்) ஆளுக்கு தலா ரூ.15 லட்சம் என மொத்தமாக ரூ.30 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளோம். இன்று உலகநாடுகள் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டாலும் இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதை கொரோனா நமக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.''