Exclusive: பாஜகவில் பதவி... நானே எதிர்பார்க்காத ஒன்று.. சர்ப்ரைஸ் ஆக இருந்தது -நமீதா 'பளிச்' பேட்டி
சென்னை: தமிழக பாஜகவில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பு தரப்பட்டது தனக்கு சர்ப்ரைஸாக இருந்தது என்றும், தாம் எதிர்பார்க்காத ஒன்றும் எனவும் தெரிவிக்கிறார் நடிகை நமீதா.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவில் இணைந்த நடிகை நமீதா, அக்கட்சிக்காக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பரப்புரை செய்திருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பேசுவதற்கு அவரை தொடர்புகொண்டோம். அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;
கேள்வி: எப்படி இருக்கீங்க... லாக்டவுன் காலத்தில் பொழுதை எப்படி கழிக்கிறீர்கள்?
பதில்: நல்லா இருக்கேன், முதல்முறையாக லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது இவ்வளவு நாட்கள் வரை அது தொடரும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தளவிற்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாடி ஷூட்டிங், ரிகர்ஸல் பிஸியாக இருப்பேன். இப்போது அந்த பரபரப்புகள் இல்லை. இருப்பினும் உடற்பயிற்சி, புத்தகம் வாசிப்பது, தோட்டம் பராமரிப்பது என இப்போதும் பிஸியாகத் தான் இருக்கிறேன். மேலும், எனது கணவருக்கு சிலம்பம் தெரியும் என்பதால், அவரிடம் சிலம்பம் கற்று வருகிறேன்.
கேள்வி: நீங்கள் கவிதைகள் எழுதுவீர்கள் எனக் கூறுகிறார்கள் உண்மையா..?
பதில்: ஆம், நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 300 கவிதைகள் எழுதியுள்ளேன். இப்போது கூட லாக்டவுன் காலத்தில் 10 கவிதைகள் எழுதினேன். இவைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடும் திட்டமும் என்னிடம் இருக்கிறது. கொரோனா முடிந்த பின்னர் அதற்கான பணிகளை தொடங்குவேன்.
கேள்வி: தமிழக பாஜகவில் மாநில செயற்குழு பதவி தரப்பட்டுள்ளது... இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது. கட்சியில் சேர்ந்து 7 மாதங்கள் தான் ஆகிறது என நினைக்கிறேன். கடந்த ஆண்டு 2019 நவம்பர் மாதம் பாஜகவில் இணைந்தேன். சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நான் பாஜகவில் சேர்ந்தேன். செயற்குழு உறுப்பினர் பொறுப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த தருணத்தில் தேசியத் தலைமைக்கும், மாநில தலைமைக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
கேள்வி: செயற்குழு உறுப்பினராகி விட்டீர்கள்... பாஜக வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில்: நிச்சயம் கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவேன். இன்னும் ஓரிரு மாதங்களில் கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் இதை நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி: உங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. ஆகும் ஆசையில்லையா...? எதிர்கால அரசியல் திட்டம் என்ன?
பதில்: மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தால் பதவிகள் தேடி வரும். அதனால் தற்போது நான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை, என்ன நடக்கிறது என எதிர்காலத்தில் பார்ப்போம். என்னை பொறுத்தவரை மக்கள் சக்தி தான் முக்கியம், ஒருவேளை அவர்கள் என்னை எம்.பி.யாக்கினால் நான் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.
கேள்வி: மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் பற்றி எதிர்க்கட்சிகள் புகார் கூறுகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: அரசியல் என்றால் இப்படித்தான் புகார் கூறுவார்கள். என்னை பொறுத்தவரை மோடி ஜீ மிகச்சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுகிறார். அரசை விமர்சிக்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கலாம்.
கேள்வி: சாத்தான்குளம் வழக்கு... புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை.. இந்த சம்பவங்களை பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: இரண்டுமே வேதனையான நிகழ்வுகள். அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது ஏற்க முடியாத ஒன்று. இது போன்ற செயல்களை தடுக்க மிக கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் தேவை.
கேள்வி: மக்களுக்கு ஏதாவது கருத்து கூற விரும்பினால் சொல்லலாம்..
பதில்: கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்து தேவையின்றி வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள். வீடுகளில் இருங்கள், அவ்வாறு வீட்டில் இருக்கும் போது தியானம் செய்யுங்கள். வெளியே சுற்ற வேண்டும், சாப்பிட வேண்டும் என எல்லோருக்கும் தோன்றலாம். அந்த எண்ணங்களில் இருந்து வெளிவர மெடிடேஷன் தான் சரியான வழி.