நேற்று புகார்.. இன்று வாபஸ் ஏன்? நடிகை ராணி விளக்கம்
Recommended Video
சென்னை: 350 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதாலும் சண்முகராஜன் என்னிடமும் எனது கணவரிடமும் மன்னிப்பு கேட்டதாலும் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டேன் என்று நடிகை ராணி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நந்தினி சீரியலில் நடிகர் சண்முகராஜனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் செங்குன்றத்தில் ஒரு துணிக்கடையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ராணிக்கும் சண்முகராஜனுக்கும் ராணி கணவர் பிரசாந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்ற ராணி தனக்கு கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை விடுத்து வருகிறார் என்று சண்முகராஜன் மீது ராணி நேற்று புகார் அளித்தார். இந்நிலையில் இன்று காலை அதை அவர் வாபஸ் பெற்றார்.
நேற்று புகார் கொடுத்துவிட்டு இன்று வாபஸ் வாங்குவது ஏன் என கேள்வி எழுந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் இந்த சீரியலிலிருந்து விலகிவிட்டால் 350 குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.
அவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்படும். மேலும் இனி இதுபோல் நடக்காது, நான் செய்தது தவறுதான் என்று என்னிடமும் எனது கணவரிடமும் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டு விட்டார். இதனால் நான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டேன் என்றார்.
இதுகுறித்து சண்முகராஜன் கடந்த 20 நாட்களாக நந்தினி சீரியலில் நடித்துவருகிறேன். அப்போது எனக்கும் இந்த சீரியலில் எனக்கு மனைவியாக நடித்து வரும் ராணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
[ நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி ]
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் என்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். தற்போது நாங்களும் அவர்களும் சமரசம் ஆகிவிட்டோம். மீடியாக்களில் சொல்வது போல் இது பாலியல் தொல்லையெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் கேஸை வாபஸ் வாங்கிவிட்டார்கள் என்றார்.