பீர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் 10 ஆயிரம் அபராதம்.. ஆவேச கேள்வி எழுப்பிய நடிகை!
சென்னை: சென்னையில் நள்ளிரவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை வம்சிகாவிற்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அவர் நான் மட்டுமா குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறேன் என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன் தான் நிதானம் இழக்கவில்லை என்றும் கூறினார்.
சென்னையில் நள்ளிரவு வேளைகளில் போதையில் பலர் அதி வேகமாக காரை ஓட்டி செல்வது அதிகமாக நடக்கிறது. சிலர் குடிபோதையில் கண்டபடி சென்று விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இப்படி சொகுசு கார்கள் மோதி விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையை தனியாக பட்டியலே போடலாம். இப்படி விபத்து ஏற்படுத்துபவர்களில் பெரிய இடத்து பிரபலங்கள் தொடங்கி பெரிய ஸ்டார்களும் அடக்கம்.
மதுரையில் சரவணன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக, பாஜகவில் இருந்து திமுகவில் இணைந்த 500 பேர்
கர்நாடக மாநில பதிவெண்
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் அசுர வேகத்தில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.
விரட்டி பிடித்த பொதுமக்கள்
அதேநேரம் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் வேகமாக சென்ற அந்த காரை, சில வாகன ஓட்டிகள் விரட்டி சென்று வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே மடக்கினர். அப்போது காரை ஓட்டிய இளம்பெண், மதுபோதையில் நிற்க முடியாமல் தள்ளாடியபடி இருந்திருக்கிறார். இதுகுறித்து. தகவலறிந்த வடபழனி போலீசார் விரைந்து வந்து, போதையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவரை விசாரித்ததில் அவர் நடிகை வம்சிகா என்பதும், அவர் தமிழில் சமுதாயம் செய், ஊடுருவல் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் எதுவும் வெளியாகவில்லை.
வழக்கு பதிவு
அதைதொடர்ந்து கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டு பீர் சாப்பிட்டு விட்டு பின்னர் காரில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, பொதுமக்களை அச்சுறுத்தியது, மது போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில் வம்சிகா மீது வழக்கு பதிவு செய்தனர்.
போலீசில் புகார்
பின்னர் அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து எழுதிவாங்கி கொண்டு விடுவித்தனர். அவரை பாஜக பிரமுகர் பாலாஜி என்பவர் போலீசிடம் பேசி மீட்டு சென்றார். இருப்பினும் பொதுமக்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் வம்சிகாவை போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான வம்சிகாவுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை கட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளிவந்தவர் வம்சிகா செய்தியாளர்களை சந்தித்ததார்.
நடிகை வம்சிகா கேள்வி
அப்போது நடிகை வம்சிகா கூறுகையில், ‘குடித்துவிட்டு கார் ஓட்டுவது தவறுதான். ஆனாலும் நான் யார் மீதும் காரை கொண்டு சென்று மோதவில்லை. பீர் குடிச்சேன், ஆனாலும் நான் நிதானமாக தான் வண்டியை ஓட்டினேன். உலகத்தில் யாரும் செய்யாத தவறை நான் செய்துவிட்டேன். நான் மட்டும்தான் இந்த உலகத்திலேயே குடித்துவிட்டு கார் ஓட்டியுள்ளேன் என்றார். இருப்பினும் அவருடன் வந்த பாஜக பிரமுகர் பாலாஜி செய்தியாளர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டுவிட்டு வம்சிகாவை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.