என்னா அரசியல் தந்திரம்!.. ஒரு எம்பி இப்படி செய்யலாமா.. திருமாவளவனை விமர்சித்த வனிதா விஜயகுமார்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ஆதரவாக டிவிட்டரில் வாக்கு கேட்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் அமர்க்களமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வந்தனர்.
அந்த வகையில் தற்போது 5 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். அமுதவாணன், அசீம், நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் இறுதியாக இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வின்னரும் ஒரு ரன்னரும் தேர்வு செய்யப்படுவார்கள்.
உங்க மனசுல நினைச்ச மாதிரி கிடையாது.. உண்மையை உடைத்த பிக்பாஸ்.. பெட்டியை தூக்க போகிறவர் இவரா?
5 பேரில் நந்தினி மட்டும்
இவர்கள் 5 பேரில் நந்தினி மட்டுமே நிகழ்ச்சி தொடங்கிய 7ஆவது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வந்துள்ளார். மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸில் இருக்க வேண்டும். இவர்கள் மக்கள் வாக்களிப்புடன் யார் இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவர். இந்த போட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் வீடு
இவர் பிக்பாஸ் வீட்டில் பொறுமையாக விளையாடி வருகிறார். ஏதாவது அநீதி என்றால் உடனே குரல் கொடுக்கிறார். அறம் வெல்லும் என கூறி விளையாடுகிறார். இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 5 பேரில் யார் வெற்றி கோப்பையை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த 5 பேரில் விக்ரமனுக்கும் அசீமுக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள்
ஆரம்பத்திலிருந்தே விக்ரமனை நினைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெருமிதம் அடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு என்ற பெயர் எப்படி உருவானது என்பது குறித்து விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் விளக்கியிருந்தார். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தம்பி விக்ரமனுக்கு வாக்களித்து அவரை வெற்றியடைய செய்வோம்.
வனிதா விஜயகுமார்
அவருக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில், இதற்கு என்ன சொல்கிறீர்கள். இதெல்லாம் அரசியல் தந்திரம். மரியாதைக்குரிய ஒரு அரசியல் கட்சித் தலைவரும் இன்னாள் எம்பியுமான ஒருவர் ரியாலிட்டி ஷோவில் குறிப்பிட்ட போட்டியாளருக்கு வாக்களிக்குமாறு தனது தொண்டர்களிடம் எப்படி கேட்க முடியும்.
ஷிவின்தான் தகுதியானவர்
அந்த போட்டியாளர் அவருடைய கட்சியை சேர்ந்தவர் என்பதாலா? மிகவும் சாமர்த்தியமான அரசியல் விளையாட்டு. மைண்ட் கேமை பயன்படுத்தி மக்களின் அன்பு மற்றும் அரவணைப்புடன் விளையாட முயற்சிக்கிறார்கள் என வனிதா கொந்தளித்திருந்தார். அது போல் அவர் இன்னொரு ட்வீட்டில் ஷிவின்தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர், அவருக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.