சர்ச், மசூதியை சொல்லுங்களேன்.. போய் உங்க மாமனாரை கேளுங்க.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஜோதிகா
ஜோதிகாவுக்கு இந்து பிரமுகர்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்
சென்னை: கடந்த 2 நாட்களாக எங்கு பார்த்தாலும், நடிகை ஜோதிகா குறித்த பேச்சாகவே உள்ளது.. தஞ்சை கோயிலுக்கு எதிராக இவர் பேசிவிட்டார் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்!! நடிகர் எஸ்.வி.சேகரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்படி என்னதான் பேசினார் ஜோதிகா?
Recommended Video
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ஜோதிகாவையும் பாரபட்சம் இல்லாமல் வாழ வைத்தது.. 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு பிழைப்புக்காக வந்தவர் சொந்த முயற்சியில் திரை உலகில் உயர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிக்க முக்கிய காரணம் ஜோதிகாவின் டெடிகேஷன்தான்!!
பெரிதாக எந்த விவகாரத்திலும் சர்ச்சையிலும் சிக்காத ஜோதிகா, இப்போது ஒரு பிரச்சனையில் பேசப்பட்டு வருகிறார்.. மதரீதியான பிரச்சனை என்பதால் இதன் எதிர்ப்பும், வலுப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை ஜோதிகா இழிவுபடுத்தி விட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜோதிகா
இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்.. இதில் முதல் ஆளாக கண்டனம் தெரிவித்துள்ளது நடிகர் எஸ்விசேகர் தான்... "ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு... கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று... இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்... உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உதாரணம்
பல இந்து மத ஆதரவாளர்களும் தலைவர்களும், உங்களுக்கு உதாரணம் காட்ட கோயில்தான் கிடைச்சதா, சர்ச், மசூதி கண்ணுக்கு தெரியலையா? இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. தஞ்சை கோயல் ஹிந்துகளின் நம்பிக்கை அடையாளம், அதை கொச்சைப்படுத்த அனுமதிக்க முடியாது" என்று கண்டனங்கள் எழுந்தபடியே உள்ளன.. உண்மையில் ஜோதிகா மேற்கோள் காட்ட இந்து கோயிலை சொல்லி இருக்க கூடாது.. ஒருகுறிப்பிட்ட இனத்தவர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைத்து , யோசித்து பேசியிருக்க வேண்டும். சாதாரண நபர்களே எது பேசினாலும் உற்று கவனிக்கப்படும் நிலையில், ஒரு திரைபிரபலம் பேசும்போது நிகழ்கால சூழல்கள் என்ன என்பதை உணர்ந்துதான் உதாரணம் சொல்லி பேசியிருக்க வேண்டும்.
ஆஸ்பத்திரி
அதே சமயம், ஜோதிகா எந்த உள்நோக்கத்துடனும் இதை பேசவில்லை என்றே தெரிகிறது. காரணம், இந்த ஆஸ்பத்திரி நிலைமையை அவர் சொல்லும்போது வார்த்தை வராமல் தொண்டை கம்மியது.. கண் கலங்கியது.. அந்த அளவுக்கு ஆஸ்பத்திரியின் சூழல் அவரை மனதளவில் பாதித்திருக்கலாம். மேலும் இந்த கோயில் நிகழ்வின்போதே ஷூட்டிங்கும் நடந்ததால், டக்கென ஒப்பிட்டு பேசியிருப்பார் என்றே தெரிகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் சிவகுமார் சிறந்த ஆன்மீகவாதி - அறிவாளி - புராண, இதிகாச, இலக்கியங்களை வலியுறுத்தி சொல்லி வருபவர்... அதனால் வேண்டுமென்றே ஒரு சாராரை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஜோதிகாவுக்கு துளியும் இருக்காது என்றே தெரிகிறது.
இந்துக்கள்
அப்படி இஸ்லாமியராக தன்னை காட்டிக் கொள்ள ஜோதிகா முயல்வதாக இருந்தால், சூர்யாவை கல்யாணம் செய்து கொண்டு, இங்கேயே இந்து முறைப்படி குடும்பமும் நடத்தி கொண்டிருக்க மாட்டார்.. சொந்தமாக கல்வி நிறுவனத்தை நடத்திவருவதால், ஏழை மாணவர்களின் துயரத்தை கண்ணால் கண்ட வலியாக கூட இது வெளிப்பட்டிருக்கலாம்.. அதற்காக ஜோதிகா மீது தனிநபர் தாக்குதல்களை மிக மோசமாக தொடுப்பது அழகல்ல.
கருத்துக்கள்
விமர்சனங்களை பாசிட்டிவ் விமர்சனங்களால் எதிர்கொள்ளும் மனநிலை இங்கு குறைவாகவே உள்ளது.. ஜோதிகா செய்தது அயோக்கியத்தனம் என்றால் "மீடியாவில் இருக்கும் பெண்கள் மேலதிகாரிகளை அட்ஜஸ்ட் பண்ணிதான் உயர் பொறுப்புக்கு வருகிறார்கள்" என்று எஸ்வி சேகர் அன்று பேசியதை எந்த கணக்கில் வைத்து கொள்வது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
வீடியோ
உண்மையில் ஜோதிகா தமிழர்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் அந்த வீடியோவில் ஒரு பதிவும் இடவில்லை... உண்டியலில் போடும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பயன்படும் ஆஸ்பத்திரிக்கும், ஸ்கூலுக்கும் செலவிடுங்கள் என்பதுதான். கோயில்களில் பணத்தை போடவே கூடாது என்று சொல்லவில்லை... குறிப்பாக தஞ்சை கோயிலை பற்றி அவதூறாக, அவமரியாதையாக பேசவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது!
பள்ளிவாசல்கள்
இன்று ஜோதிகா எழுப்பிய இந்த கேள்வியானது, பல நூறு வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள மனித நேயம் சிந்தனை உள்ள மக்கள் எழுப்பிய கேள்விதான்... பள்ளிவாசலுக்கும் இது பொருந்தும்... தேவாலயங்களுக்கும் இது பொருந்தும்.. ஏழைகளுக்கு செய்யும் சேவைதான் இறைவனுக்கு செய்யும் சேவை என்று அனைத்து ஆன்மீக வழிகாட்டுதலும் காலங்காலகமாக வலியுறுத்தும் நிலையில் தரக்குறைவான வார்த்தைகளை ஜோதிகா பயன்படுத்தவில்லை!
குடும்ப வாழ்க்கை
அப்படியே ஜோதிகா பேசியது தவறாக இருந்தாலும், கருத்துரிமை அடிப்படையில் ஒருவர் கருத்திற்கு எதிர்க் கருத்து வைத்து, கண்ணியமான விமர்சனங்கள் வைக்கவேண்டுமே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையையும் சேர்த்து இழுத்து கொண்டு வந்து பேசுவது அநாகரீகத்தின் வெளிப்பாடு.. அதேபோல, கோவிலுக்கு கொடுக்குற மாதிரியே அல்லது வழிபாட்டு தலங்களுக்கு கொடுக்கிற மாதிரியே, ஆஸ்பத்திரிக்கும் பணம் கொடுங்களேன் என்று பொதுவாக ஜோதிகா சொல்லி இருக்க வேண்டுமே தவிர, தஞ்சை கோயிலின் பெயரை குறிப்பிட்டு சொல்லி இருக்ககூடாது!! அந்த வகையில், ஜோதிகாவும் யோசித்து கவனமாக பேசியிருக்கலாம்!!
அமைதி பூங்கா
ஆனால் ஒன்று... சாதி, மதம், சமய பேதமில்லாமல் மொத்த பேரையும் கொரோனா அள்ளி போட்டுக் கொண்டு போய் வருகிற இந்த நேரத்திலும் வாக்குவாதங்களும், மிக மோசமான வார்த்தை தாக்குதல்களும் வீசப்படுவது வருத்தமாக உள்ளது.. இப்படி யதார்த்தமாக பேசியதற்கெல்லாம் சாதி, மதத்தை கையில் எடுத்து கொண்டு உட்கார்ந்துவிட்டால், புத்தரும், வள்ளலாரும் நடமாடிய இந்த புண்ணிய பூமி கலவர பூமியாகத்தான் மாறும்!!