விருந்து இல்லை;விழா இல்லை... எல்லா நாளும் அன்பும்-தொண்டும்... இது தியாகச்சுடர் சாந்தாவின் கதை..!
சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக கருதப்படுகிறது.
Recommended Video
அப்படியென்ன சாதித்துவிட்டார் சாந்தா எனக் கேட்கிறீர்களா, தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயாளிகளுக்காக அர்ப்பணித்து 65 ஆண்டுகள் மருத்துவமனையிலேயே தங்கி வரக்கூடிய நோயாளியிடம் பணம் இருக்கிறதா என பார்க்காமல் தூய மனதுடன் தொண்டு புரிந்தவர் சாந்தா.
இவரின் வாழ்வும்-தொண்டும் மருத்துவப்படிப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த பாடமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
பெண் டாக்டர்
சுதந்திர இந்தியாவுக்கு முன்பு நாட்டில் பெண் டாக்டர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியொரு காலம் அது. பள்ளிப் படிப்பே பெண்களுக்கு அதிகம் என கருதிய காலத்தில் சாந்தாவை டாக்டருக்கு படிக்க வைத்து தனது முற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்தினார் அவரது அப்பா விஸ்வநாதன். 1949-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்த சாந்தா, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை கல்லூரியில் DGO மற்றும் MD படிப்பை 1954-ம் ஆண்டு முடித்தார்.
பக்குவம்
ஆரம்பத்தில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக தனது பணியை தொடங்கிய சாந்தா, காலை 8 மணிக்கு பணி என்றால் 7.45-க்கு அறைக்குள் இருப்பார். டாக்டர் எப்போது வருவார், எத்தனை மணிக்கு வருவார் என்று கேட்கும் பேச்சுக்கே அவரிடம் இடமிருக்காது. வரக்கூடிய நோயாளிகளுக்கு சாந்தா காட்டும் அன்பும்-கனிவுமே அருமருந்தாக திகழத் தொடங்கியது. பொறுமையாக நோயாளிகளை அணுகுவது, அவர்கள் கூறும் குறைகளை முகம் கொடுத்து கேட்டு அதற்கு உரிய விளக்கம் தருவது என இளம் வயதிலேயே பக்குவமுடன் நடந்துக்கொள்ள தொடங்கினார் சாந்தா.
பெண் மருத்துவர்கள்
இதனிடையே நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம் மலக்குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழக்கிறார். இந்த நிகழ்வு முத்துலட்சுமி ரெட்டியை உலுக்குகிறது. அப்போதைய காலத்தில் நாட்டில் புற்றுநோய் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து தனது மகன் கிருஷ்ணமூர்த்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி புற்றுநோய் குறித்த மருத்துவப் படிப்பை படிக்க வைத்த முத்துலட்சுமி ரெட்டி சென்னை அடையாறில் கேன்சர் இன்ஸ்டியூட் நிறுவனத்தை தொடங்கினார்.
அடையாறு
அவ்வாறு தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என எண்ணிய மருத்துவர் சாந்தா, தனது அரசுப் பணியை உதறிவிட்டு முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இடம்பெயர்கிறார். அப்போது நாட்டின் இரண்டாவது தமிழகத்தின் முதலாவது புற்றுநோய் மருத்துவமனையாக அது திறக்கப்பட்டது. இதற்கான நிலத்தை அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
2 செவிலியர்கள்
சாந்தா உட்பட 2 மருத்துவர்கள், 12 படுக்கைகள், 2 செவிலியர்கள், 2 லேப் டெக்னீஷியன்கள் என தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இன்று உலகின் தலைசிறந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. முழுக்க முழுக்க தொண்டுக்கு முதலிடம் கொடுத்து ஓராண்டு ஈராண்டு அல்ல 65 ஆண்டுகள் மருத்துவமனையையே வீடாக தங்கி எந்நேரமும் தொண்டு புரிந்து வந்த மருத்துவர் சாந்தாவால் தான் இத்தகைய நிலையை அந்நிறுவனம் அடைய முடிந்தது.
எல்லா நாளும் தொண்டு
விருந்து-விழாக்களில் நாட்டம் காட்டாமல் எப்போதும் பிறர் துயர் துடைக்கும் புனிதக் காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சாந்தா. கடைநிலை ஊழியர் தொடங்கி நோயாளிகள் வரை தன் வாழ்நாளில் யாரிடமும் கடுஞ்சொற்கள் பேசாதவர். அனைவரிடத்திலும் அன்பொழுக இன்முகம் காட்டியவர். மருத்துவப் பணிக்கான அடிப்படை தகுதியே இது தானே. ஆனால் இன்று பலரும் இதனை ஏதோ புரிந்துகொள்ள தவறிவிட்டார்கள்.
கனிவும்-பரிவும்
காலை ஒரு மருத்துவமனை மாலை ஒரு கிளினிக், நோயாளிகளின் முகம் பார்க்காமலேயே, அவர்கள் சொல்வதை ஏனோதானோ என செவிமடுத்து ம்ம்..ம்ம்.. போட்டுக்கொண்டு மருந்து எழுதும் அவசர போக்குக்கு மத்தியில், முதுமையையும் பொருட்படுத்தாமல் புற்று நோயாளிகளிடம் மருத்துவர் சாந்தா காட்டிய கரிசணம்-கருணை-அன்பு-பரிவு-பாசம்-தூய உள்ளத்துடன் ஆற்றிய தொண்டு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவர் பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.