வழக்கு, விசாரணை வந்துவிடுமோன்னு பயப்படாதீங்க... கூடுதல் கமிஷனர் அருண் வேண்டுகோள்
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு சட்ட பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வழக்கு, விசாரணை என்று நாளைக்கு வந்துவிடுமோ என பயப்பட வேண்டாம், விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற போலீசுக்கு மக்கள் உதவ வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் சாலை விபத்துகளும், அதன்மூலம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள் உதவ முன்வரவேண்டும் என்பதற்காகவும் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள சாராம்சம் இதுதான்:
"விபத்துகள் ஏற்படும்போது, அருகில் நிறைய பேர் இருந்தாலும், உதவி செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். நாளைக்கு எங்கே வழக்கு, விசாரணை என்று சிரமத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று நினைத்து கொண்டு உதவி செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்
இதனால் பெரும்பாலான விபத்துக்களில் பலத்த காயம் அடைந்தவர்கள், உரிய சிகிச்சை உடனே கிடைக்காமல் இறந்தும் விடுகிறார்கள். ஆனால், விபத்து குறித்து தகவல் தருபவர்களையும், காயம் பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களையும் எந்தவித தொந்தரவுக்கும் இன்னலுக்கும் ஆளாக்காமல் இருக்கதான் சுப்ரீம்கோர்ட் நிறைய விதிமுறைகளை வகுத்துள்ளது.
முகவரி தரலாம்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உதவி செய்ய முன்வருபவர்கள் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துவிடலாம். அவர்களிடம் யாரும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. விபத்தை நேரில் பார்த்தவர் மட்டும் முகவரி தரலாம்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அப்படி அடிபட்டவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பவர்களிடம் தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கோ அல்லது அட்மிஷனுக்கோ பணம் கேட்ககூடாது. உறவினர்கள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தர மறுத்தால் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை
விபத்தில் சிக்கிவிட்டதாக போலீசுக்கோ அல்லது கன்ட்ரோல் ரூமூக்கோ தகவல் தெரிவிப்பவர்களிடம் யாரும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்க மாட்டார்கள். ஒருவேளை தனிப்பட்ட தகவல் கேட்டு கட்டாயப்படுத்தினால் அந்த அரசு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தினால், உதவி செய்த நபர்களை சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.
வீடியோ கான்பரன்சிங்
ஒருவேளை விபத்து வழக்கு சம்பந்தமாக தாமாகவே முன்வந்து சாட்சியாக இருக்க சம்மதிப்பவர்களை போலீஸ் ஸ்டேஷன் வரும்படி கட்டாயப்படுத்தமாட்டார்கள். தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி, மேற்படி நபரின் வீட்டுக்கோ அல்லது அவர் விரும்பும் இடத்துக்கோ சென்று விசாரிப்பார். அதுவும் மஃப்டியில் சென்று மரியாதையுடன்தான் விசாரணை மேற்கொள்வார்கள். தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்சிங் முறை பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கையில் அருண் கூறியுள்ளார்.