SPB: ஆயிரம் நிலவே வா.. அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை.. வெற்றிக் கொடி கட்டிய எஸ்பிபி!
சென்னை: அடிமைப் பெண்ணில் எம்ஜிஆருக்கு பாடிய எஸ்பிபி தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பாடி தற்போது 2020-இல் அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக பாடியுள்ளார் எஸ்பிபி.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது இழப்பு திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
எஸ்பிபியின் இசைப்பயணம் என்பது நீண்ட நெடிய பயணமாகும். அவர் அடிமைப் பெண்ணில் எம்ஜிஆருக்கு ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா என்ற பாடலை பாடியுள்ளார்.
எஸ்பிபி: எப்படியாவது மீண்டுடுவார் என நம்பினோமே.. எல்லா பிரார்த்தனையும் வீணாகிடுச்சே: ரசிகர்கள் கதறல்
சாந்தி நிலையம்
இந்த படம் 1969இல் வெளியானது. சாந்தி நிலையம் படத்தில் இயற்கையெனும் இளையகன்னி பாடலை முதலில் அவர் பாடியிருந்தாலும் அடிமைப் பெண்ணில் அவர் பாடியதுதான் முதல் தமிழ் பாடலாக அமைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் 45 ஆயிரத்திற்கு மேலான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
ரஜினிக்கு பாடல்
ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அவர் ஓபனிங் சாங் பாடியுள்ளார். அத்தனை பாடல்களுமே ஹிட் அடித்தது. தர்பார் படத்தில் சும்மா கிழி பாடலை பாடியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் இனி வெளியாகவுள்ள ரஜினியின் அண்ணாத்த படத்திலும் ரஜினிக்காக பாடலை பாடியுள்ளார்.
பன்முகத் திறமை
பல நடிகர்களுக்கு எஸ்பிபி பாடியிருந்தாலும் அத்தனையிலும் வேறுபாடுகளை காட்டியிருப்பார். ரஜினிக்கு பாடிவிட்டு கமலுக்கு பாடியிருந்தால் குரலே மாறிவிடும். அஜித் , விஜய், விஜய்காந்த் உள்ளிட்டோரின் குரலுக்கு ஏற்ப பாடல்களை பாடியுள்ளார். பாட்டு மட்டுமல்லாமல் நடிப்பு, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத் திறமையை கொண்டிருந்தார்.
திரைத்துறையினர்
அப்படிப்பட்ட எஸ்பிபி சங்கீத மேகத்தில் கரைந்து விட்டதாகவே திரைத்துறையினர் சோகத்தில் உள்ளார்கள். அவர் பாடிய பாடல்கள் மூலம் என்றென்றும் உயிர்த்திருப்பார் என ரசிகர்கள் தங்களை தேற்றிக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர்.