காரணமின்றி தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முடியாது... பாதுகாப்பு கெடுபிடி
சென்னை: தலைமைச்செயலகத்திற்குள் காரணமின்றி இனி யாரும் நுழைய முடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கோட்டைக்கு வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க வருவதாக கூறி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கோட்டைக்குள் செல்வது குறிப்பிடத்தக்கது.
முழங்கால் வலியால் அவதிப்பட்ட நாராயணசாமி... அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள்
புதிய நடைமுறை
தலைமைச் செயலகத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்கள் படம் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படுகிறது.
சந்திக்க வருகை
தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளை சந்திக்கவும், கோட்டைக்கு வரும் அமைச்சர்களை சந்திக்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த புதிய நடைமுறையால் பார்வையாளர்கள் நினைத்தது போல் கோட்டை வளாகத்தில் சுற்றித்திரிய முடியாது.
தொடருமா?
புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கும் நடைமுறையால் பார்வையாளர்களை தலைமைச் செயலக வளாகத்திற்குள் அனுப்ப நீண்ட நேரம் ஆகிறது. இதனால் தேவையில்லாத வாக்குவாதங்களும் பார்வையாளர்கள் போலீஸார் மத்தியில் நேற்று ஏற்பட்டது. இதனால் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை தொடருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
காவல் ஆணையர் அலுவலகம்
சென்னையில் ரிசர்வ் வங்கி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டு மூலம் அனுமதி அளிக்கும் நடைமுறை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.