பேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பேனர் சரிந்து பலியான மாணவி சுபஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிடெக் படித்துள்ள இவர் கனடாவில் மேற்படிப்புக்காக தேர்வு எழுதியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் பைக்கில் சென்ற போது சென்டர் மீடியனில் கட்டப்பட்ட பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறிய அந்த பெண் கீழே விழுந்தார்.
அவர் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுபஸ்ரீ இறக்க காரணமாக பேனரை வைத்தது அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயகோபால் சரணடைந்தார்.
எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!
சுமார் 40 நாட்கள் சிறையில் இருந்த ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனையை சேர்ந்த ஏழை நோயாளிகளுக்கு மொத்தம் ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும். மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.