எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை.. மூப்பனாரை முடக்கி.. விஜயகாந்த்தை வளைத்து.. தெறிக்க விட்ட ஜெ.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியை இறுதிவரை தூக்கி நிறுத்தினார் ஜெயலலிதா.
சென்னை: எம்ஜிஆர் அன்று உருவாக்கிய கட்சியை பல சோதனைகள், விமர்சனங்களை தாண்டி இன்றுவரை ஆலம்விருட்சமாக வளர விட்டவர் ஜெயலலிதாதான்!
2001 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது அதிமுக. இப்போது படு நூதனமாக மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணியில் இணைந்தது. காங்கிரஸ் - அதிமுக கூட்டணியை எதிர்த்துப் பிறந்த கட்சிதான் தமாகா. ஆனால் ஜெயலலிதாவுடன் போய் இணைந்தார் மூப்பனார். கூடவே இடதுசாரிகள், பாமக ஆகியவையும் இணைந்தன.
இக்கூட்டணி வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதாவின் 2வது ஆட்சிக்காலம் உண்மையிலேயே அட்டகாசமாக இருந்தது. நிறைய மக்கள் நலத் திட்டங்களை அவர் அமல்படுத்தினார். ஜெயலலிதா ஒரு தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்து எம்ஜிஆரை மறக்கடித்தது இந்த காலகட்டத்தில்தான் என்றும் சொல்லலாம்.
தோல்வியை தழுவியது
ஆனால் 2004 லோக்சபா தேர்தலில் மக்கள் முழுமையாக ஜெயலலிதாவை நிராகரித்தனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக இத்தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெல்லவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிர வைத்தது. ஜெயலலிதாவின் கூட்டணிக்கு இத்தேர்தல் மிகப் பெரிய தோல்வியையே பரிசாக கொடுத்தது.
அதிரடி காட்டிய திமுக
2006 சட்டசபைத் தேர்தலில் திமுக அதிரடி காட்டியது. மதிமுக உள்ளிட்ட சிறு கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைத்து ஜெயலலிதா போட்டியிட்டார். தொங்கு சட்டசபை வரும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் திமுக பெரும்பானமை பலத்துடன் அதிரடியாக வென்றது. 2009 லோக்சபா தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தது. 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கருணாநிதிக்கே ஷாக்
2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக படு புத்திசாலித்தனமான கூட்டணியை அமைத்தது. இந்த முறை பரம வைரியாக கருதப்பட்ட தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து அதிர வைத்தார் ஜெயலலிதா. கருணாநிதிக்கே ஷாக் கொடுத்தார் ஜெயலலிதா.
தேமுதிக
இந்த தேர்தலில் தேமுதிக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து 202 தொகுதிகளை அதிமுக கூட்டணி வென்றது. அதிமுக மட்டும் 150 தொகுதிகளில் வென்றது. தேமுதிகவுக்கு புதிய அங்கீகாரம் இந்த வெற்றியின் மூலம் கிடைத்தது. ஆனால் இந்தக் கூட்டணி நீண்ட காலம் நிலைக்கவில்லை. மிகப் பெரிய மோதலை சட்டசபையில் சந்தித்தது அதிமுக - தேமுதிக.
படு தோல்வி
2014 லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். வரலாறு காணாத வகையில் 37 தொகுதிகளில் அதிமுக அதிரடியாக வென்றது. திமுக படு தோல்வியைச் சந்தித்தது. அத்தனை கட்சிகளும் கிட்டத்தட்ட வரலாறு காணாத சரிவை சந்தித்தன. பாமக, பாஜக ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
கூட்டணி சூழல்
எம்ஜிஆர் தலைமையில் அமைந்த கூட்டணிகளுக்கும், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. எம்ஜிஆரை விட ஜெயலலிதா பல தைரியமான முடிவுகளை எடுத்தார். எம்ஜிஆர் அரசியல் சூழலை வைத்து கூட்டணிகளை அமைத்தார் என்றால் ஜெயலலிதா தான் அமைத்த கூட்டணிகளால் அரசியல் சூழலை மாற்றிக் காட்டிய வரலாறு படைத்தவர்.
பங்காளி பாமக
இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக தனது பங்காளியான பாமகவை கூட்டணிக்குள் இழுத்து வந்துள்ளது. பாஜகவுடனும் மீண்டும் கரம் கோர்த்துள்ளது. இந்தக் கூட்டணி எப்படி தேர்தலில் ரிசல்ட் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.