சீமானுக்கு வலைவிரிக்கும் அதிமுக... சட்டமன்ற தேர்தலுக்கு இ.பி.எஸ்.போடும் கணக்கு
சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் சத்தமின்றி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் திமுக, அதிமுகவுக்கு இணையாக பேரூர், கிளை வரை கட்சியின் அமைப்பை நிறுவி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சும் செயல்பாடும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதால் 18-ல் இருந்து 35 வயதிற்குட்பட்டோர் அதிக எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சியில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் மூலம் கட்சியும் துடிப்பாக இயங்கி வருகிறது. ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து நாம் தமிழர் கட்சியின் குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிபார்க்க வைத்தது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாழ்வா சாவா என்ற போராட்டம். இதில் வெற்றிபெற இரண்டு கட்சிகளும் போராட்டத்தை தொடங்கியுள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள திமுக, சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து களமாட உள்ளது. இதனால் அதிமுகவும் அதற்கு இணையாக வியூகம் வகுக்கும் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை கோரி சீமான் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசியதில் முக்கிய தொழிலதிபர் ஒருவர் பின்னணியில் இருந்ததாக கூறப்படுகிறது. திமுகவை காட்டிலும் அதிமுகவை சற்று குறைத்து தான் எப்போதும் விமர்சிப்பார் சீமான். இந்நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் திமுக பொது எதிரி என்பதால், வரும் தேர்தலில் சீமானுடன் இணைந்து களமாட விரும்புகிறதாம் அதிமுக. தேமுதிகவை விட நாம் தமிழர் கட்சி ஆக்டிவாக இருக்கிறது என அதிமுக சீனியர்கள் சிலரும் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பல திருப்பங்களும், மாற்றங்களும் ஏற்படும் எனத் தெரிகிறது. நாம் தமிழர், அதிமுக ஆகிய இரண்டு கட்சி தலைமையும் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.